யமஹா பைக்கை சர்வீசுக்கு கொடுத்துவிட்டு ஹெல்மெட்டுடன் வேகமாக நடந்தான் சித்தார்த். புருஷ லட்சணமாக கொளத்தூர் ஸ்டேட் பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராய் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. உயரமும், சிகப்பு நிறமும் அவன் அம்மா கொடுத்த வரம். திடமான உடலும், களையான முகமும் அற்பாயுசில் போய்ச் சேர்ந்த அப்பாவைப்போல. பத்து நிமிடம் பேசினால் எவருடனும் உயிர் நண்பன் ஆகக்கூடிய வாயை உடையவன். “மார்க்கெட்டிங்கில் போயிருந்தா இந்நேரம் நீ அம்பானி ஆகியிருப்ப” என்பார் அவனுடைய பிராஞ்ச் மேனேஜர். “நான் பொறந்தப்ப எங்கப்பா சரஸ்வதி கோயிலுக்கு கூட்டிட்டு போயி என் நாக்கில் ‘அ’ எழுத்தை எழுத சொன்னாராம். அடுத்ததா வேற யாரும் இல்லாததால ஐயரு தமிழில் இருக்கும் 494 எழுத்தையும் எழுதிட்டாருனு அம்மா சொல்வாங்க” “மொத்தம் 247 தானே?” “நாக்கு நீளமா இருப்பதால் இம்போசிஷன் மாதிரி ரெண்டு தடவை எழுதிட்டாரோ என்னவோ” மேனேஜரும் மற்றவர்களும் சிரிப்பார்கள். மேனேஜர் என்ற நினைவு வந்ததும் இலவச இணைப்பாக பேங்க் பத்து மணிக்கு திறக்கும் என்பதும் ஞாபகம் வந்தது. அதென்னவோ சித்தார்த்துக்கு காலையில் பத்து மணிக்கு டாண்னு வேலைக்கு போவது கழுதைக் கொம்பாக இருந்தது. குதிரைக் கொம்போ, கழுதை கொம்போ! பெயரில் என்ன வித்தியாசம் என்று ஷேக்ஸ்பியரே சொல்லியிருக்கிறார். பஸ் நிறுத்தத்திலிருந்து கொளத்தூர் பஸ் புறப்படுவது தெரிய, அவசரமாய் ஓடிச் சென்று முன் வாசல் வழியாக வலது காலை எடுத்து வைத்து ஏறினான். யாரோ பார்க்கிறார்கள் என்று ஏழாம் அறிவு எச்சரிக்க, திரும்பினான். இடப்புறத்தில் இருவர் அமரும் சீட்டில் அப்போதைய ஐஸ்வர்யா ராயின் தங்கை போல ஒரு பெண்ணும், இப்போதைய அம்பிகாவின் அக்காவைப் போல ஒரு அக்காவும் இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. “பஸ்ல ஹெல்மெட் போட்டுட்டு போக சொல்லி புதுசா ரூல் வந்துருச்சு போல” என்று அம்பிகா கூறியதற்கு தான் இருவரும் சிரித்தபடி இருந்தனர். “சும்மா இருங்க மேடம். அவர் பார்க்கிறார்” என்றாள் ஐஸ்வர்யா. “ஆமாம். போஸ்டரை பார்க்கிற மாடு மாதிரி உன்னைத்தான் பார்க்கிறான்” என்றதும் கீழே குனிந்து கொண்டு இருவரும் சிரித்தனர். அவள் நிமிர்ந்து பார்க்க சித்தார்த் கணப்பொழுதில் காதலில் விழுந்தான். அதென்னவோ ஆண்களுக்கு மட்டும் கண்டதும் காதல், கண்ட கண்ட இடத்தில் எல்லாம் காதல் வந்து விடுகிறது. இன்ஸ்டன்ட் காபி போல. பெண்களுக்கோ அக்கினி மூலை, வாயு மூலை, காதல் மூலை பார்த்து, ஆற அமரத்தான் வருகிறது. பில்டர் காபி போல. சித்தார்த்தின் மனதில் “இந்த உலகத்தில் யாருமே இவ்வளவு அழகான அழகைப் பார்த்திருக்க முடியாது” என்று சூர்யாவும், “நீ அழகுனு நினைக்கல, என்னைக் காதலிப்பனு நினைக்கல” என்று மாதவனும் டயலாக் பேச, இடையில் “சீட் காலியா இருக்கு. போயி உட்காருங்க” என்ற கண்டக்டரின் டயலாக் சி. கரடியாய் நுழைந்தது. ஐஸ்வர்யாவுக்கு வலப்பக்கத்தில் மூவர் அமரும் சீட்டில் சென்றமர்ந்த சித்தார்த் சொர்க்க வாசல் திறக்க காத்திருக்கும் பக்தனைப் போல அவள் திரும்புவதற்காக காத்திருந்தான். இருபது பெர்சன்ட் இடத்தில் மெல்லிய கொடியாய் ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, மீதமிருந்த இடத்தை அம்பிகாக்கா ஆக்ரமித்திருந்தாள். சற்று நேரத்தில் எதேச்சையாய் திரும்புவது போல ஐஸ் திரும்பி அவனைப் பார்க்க, மனதுக்குள் ஜிவ்வென்று இருந்தது. உடலின் ஏழு சக்கரங்களும், எண்ணற்ற வாசல்களும் வெடித்து திறந்தன. “கண்ணே உன் கண்கள் என்ன மேட்டூர் டேமா ! பார்வையில் இவ்வளவு கரெண்ட் உற்பத்தியாகிறது. இல்லை கட்ச் வளைகுடாவா! இத்தனை நீளமாக நெஞ்சில் பாய்கிறது” என எண்ணங்கள் அலையடித்த்தன. “வாலாய் இருந்த என்னை வாலி ஆக்கிவிட்டாய். முத்தாய் இருந்த என்னை வைரமுத்து ஆக்கிவிட்டாய்’ என்று கவிதை பிரவாகமெடுக்க, ‘எடுறா அந்த நோட்டை’ என்றது மனது. ‘எங்கே இறங்குறாங்கனு தெரியலயே. ஒரு நடை கோயம்பேடு வரைக்கும் போயிட்டு வந்துரலாமா’ என்று நினைத்தான். லேட்டாக வரும் மாணவர்களை வரவேற்க கையில் பிரம்புடன் காத்திருக்கும் வாத்தியாரைப் போல, மேனேஜரின் முகம் மனதில் தோன்றி மிரட்டியது. எப்போது டிக்கெட் வாங்கினான், எப்படி கீழிறங்கினான் என்பது எதுவும் தெரியாமல், குணா கமலைப்போல ‘பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க’ அவர்களைப் பின்தொடர்ந்தான். இரண்டு பெண்களும் கொளத்தூர் ஸ்டாப்பில் இறங்கியிருக்க, மெலிதான ஆச்சர்யத்துடன் பின்தொடர்ந்தான். நிலத்தில் நடை பயிலும் இளந்தென்றலைப் போல மென்மையாக ஐஸ்வர்யா நடந்து போக, ‘பெண்கள் எப்படி இவ்வளவு மிருதுவாக நடக்கின்றனர்’ என்று எண்ணினான். பேங்க் இருக்கும் திசையிலேயே இருவரும் நடந்தனர். காட்டன் சேலையை ஐஸ் கனகச்சிதமாய் உடலில் நெய்திருக்க, மைசூர் சில்க்கை அம்பிகா மம்மியை பாடம் செய்வது போல உடலைச் சுற்றியிருந்தாள். இருவரையும் ஒன்றாக பார்க்கையில் யானையை அழைத்துச் செல்லும் யானைப்பாகனைப் போலிருந்தாள் ஐஸ். இவன் பின்தொடர்வதை இருவரும் உணர்ந்து விட்டதாய் தோன்றியது. பேங்கிற்கு பக்கத்தில் இருந்த லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இருவரும் நுழைய, செக்யூரிடி வணக்கம் வைத்தான். ‘இங்கு தான் வேலை செய்கிறார்களா’ என்றெண்ணிய சித்தார்த்துக்கு பழம் நழுவி ஜூஸரில் விழுந்த மாதிரி இருக்க, ‘எதுக்கும் பேங்கை எட்டி பார்த்துட்டு வந்துருவோம். மேனேஜர் வருத்தப்படுவார்’ என வேகமாக பேங்கிற்கு சென்றான். உள்ளே நுழைந்ததும் கண்ணாடி அறைக்குள் இருந்த மேனேஜர் பத்து என்கிற பத்மநாபனைப் பார்த்து சிறிய இளிப்புடன் வணக்கம் வைக்க, பத்து அவசரமாய் கையசைப்பது தெரிந்தது. “இன்னைக்கு ஆஃபீஸுக்கு ஆடிட்டர் வர்றார். அவரை நீ தான் அட்டென்ட் பண்ணனும், சீக்கிரம் வான்னு நேத்தே சொன்னேன் இல்ல” “சாரி சார். மிஸ்ஸு பஸ் ஆயிடுச்சு. ஐ மீன் பஸ்ஸு மிஸ் ஆயிடுச்சு” “ராமஜெயம்னு ஒருத்தர் வந்திருக்கார். உன் சீட்டிற்கு பக்கத்து கவுண்டரில் உட்கார வச்சிருக்கேன். ஓடு” “நான் பாத்துக்கிறேன் சார். கவலைப்படாதீங்க” என்று சொல்லி விட்டு “ஏன் சார் இந்த பொண்ணுங்க மட்டும் எப்படி ஒரு எறும்பு கூட நசுங்காத மாதிரி தென்றலா நடந்து போறாங்க?” என்று கேட்டான். மஞ்சள் காமாலை வந்து மஞ்சளாய் இருப்பவனைப் பார்ப்பது போல அவனைப் பார்த்த பத்து “கல்யாணம் ஆனதும் புயலா நடப்பாங்க. அப்ப நிலநடுக்கம் கூட வரும். நீ போயி அவரைக் கவனி” என்று துரத்தினான். சீட்டிற்கு சென்ற சித்தார்த் “சாரி பார் தி லேட் சார்” என்றான். “இட்ஸ் ஓகே. ரெஜிஸ்டர்ஸ் எல்லாம் ரெடியா?” அவரைக் கண்டு கொள்ளாமல் “சேகர் சாருக்கு காபி கொடுத்தியா?” என்றான் ஆபீஸ் பையனிடம். “இல்ல சார்” “பக்கத்துல ஐயர் கடை இருக்கு சார். அவரு கைக்கு ஒரு நாளு தங்கத்துல வளையல் போடலாம்னு இருக்கேன். அவ்வளவு நல்லா இருக்கும். நீங்க புரூவா, நெஸ்கபேவா?” “பில்டர் காபி” “சாருக்கு சுகர் கம்மியா போட்டு ஒரு காபி வாங்கிக்க சேகர். எனக்கு சுகர் அதிகமா” “எனக்கு சுகர் கம்மியானு எப்படி கரெக்ட்டா சொன்னீங்க?” “கொஞ்சம் வயசாயிருச்சே அதனால” என்று சிரித்தான். காபி வந்தபோது அதிக சர்க்கரை போட்ட டம்ளர் எதுவென்று கேட்டு ஆடிட்டர் எடுத்துக்கொண்டார். “மொத்தம் நூற்று பதினெட்டு ரிஜிஸ்டர் இருக்கு. ஆன்லைன் ரிஜிஸ்டர் நாற்பத்தி ஆறு இருக்கு. ரெடியா எடுத்து வச்சிருக்கேன்.” “என்பிஏ லிஸ்ட் வேணும்” “கேஸுக்கு, கோல்டுக்கு தனித்தனியா எடுத்து வச்சிருக்கேன்” “இன் ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ் லிஸ்ட்?” “எக்செலில் பிரிண்ட் போட்டு வச்சிருக்கேன்” சித்தார்த் வேலையில் கில்லி. ஏதாவது பிரச்னை இருந்தாலும் சமாளித்து விடுவான் என்பதால் தான் ஆடிட்டருடன் இருக்க சொல்லியிருந்தான் பத்து. பம்பரமாய் சுற்றி அவர் கேட்பதையெல்லாம் பிரிண்ட் அவுட் போட்டு கொண்டு வந்தான் சித்தார்த். எள் என்றால் எள்ளுருண்டையாய் இருந்தான். சுவிஸ் பேங்கில் அகௌண்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் பெயரைக் கேட்டால் கூட கொண்டு வருவான் போலிருந்தது. இரண்டு மணி நேரம் அவர் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான். அனைத்தும் பக்காவாக இருக்க ராமஜெயத்தின் முகத்தில் திருப்தி தெரிந்தது. பன்னெண்டு மணிக்கு காபியுடன் பஜ்ஜியை பிச்சி வாயில் எறியும் போது நெருங்கிய நண்பனாகியிருந்தான். “மத்தியானம் சாப்பாட்டுக்கு எருமை மாட்டு தயிர் வேண்டாம். உங்களுக்கு வயிற்று பிரச்னை இருக்கு. அதனால பசு மாட்டு தயிர் வாங்க சொல்லிருக்கேன்” என்றான். “சரி” “அம்பத்தூர் கோட்டக்கல் வைத்திய சாலையோட மேனேஜர் நம்ம பிராஞ்ல தான் அகௌண்ட் வச்சிருக்கார். போன் பண்ணி லேகியம் கொண்டு வர சொல்லிருக்கேன். தினமும் இரவு சாப்பிட்டு படுங்க. காலைல பூவா கொட்டும்” “அடடா என் வைஃப் எல்ஐசி பாலிசி கட்ட சொல்லிருந்தா. மறந்தே போச்சு. இன்று கடைசி நாள். பக்கத்துல ஏதாவது எல்ஐசி ஆபீஸ் இருக்கா சித்தார்த்?” என்றவர் கேட்டபோது தான் ஐஸ்வர்யாவின் ஞாபகம் வந்தது. “பாலிசி நம்பரைச் சொல்லுங்க. பக்கத்து பில்டிங்கில் பிரான்ஞ்ச் இருக்கு. என் ஒன்னு விட்ட குளோஸ் பிரண்ட் இருக்கா. நானே கட்டிட்டு வர்றேன்” என்று பணத்தை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த எல்ஐசி ஆபீஸிற்கு சென்றான். அவன் கவனித்துக்கொண்ட விதத்தைப் பார்த்த போது ஆடிட்டருக்கே கண்ணில் நீர் வைத்துக்கொண்டது. எல்ஐசி அலுவலகத்தில் நுழைந்ததும் கண்கள் சுற்றிலும் படபடப்புடன் ஸ்கேன் செய்தது. “ஆண்டவா, ஐஸ் இங்க வேலை செய்யணும். அப்படி செஞ்சா அவளோட அப்பாவுக்கு மொட்டை போடுறேன்’ என வேண்டியபடி தேடினான். பேங்கைப் போலில்லாமல் ஆளரவமின்றி அமைதியாய் இருந்தது ஆபீஸ். பணம் கட்டுமிடத்தில் அம்பிகா அமர்ந்திருக்க, அங்கே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை திரிஷா என்றது. ‘இந்த விஷயம் திரிஷாவுக்கு தெரிஞ்சா அந்தம்மா மான நஷ்ட வழக்கு போடும்’ என நினைத்தான். இவனைக் கண்டதும் அம்பிகா எனும் திரிஷா அதிர, அதைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்த துண்டு சீட்டில் ஸ்ரீராமஜெயம் எனத் துவங்கி பழக்க தோஷத்தில் மூன்று முறை எழுதினான். அதற்கடுத்து பாலிசி நம்பரை எழுதி பணத்தைக் கொடுத்தான். சீட்டைப் பார்த்தவள் “பாலிசிக்காரர் பேரு எழுதுங்க” என்றாள். “ராமஜெயம்தான். ஒரு மரியாதைக்கு ஸ்ரீ போட்டேன்” அவனை ஒரு மாதிரி பார்த்த திரிஷா பணம் கட்டிய ரசீதைப் பிரிண்ட் எடுத்து கொடுத்தாள். “பக்கத்துல இருக்க பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்கேன். பாலிசி பற்றி டீடைல்ஸ் வேணும்” மேனேஜர் என்றதும் கண்களில் ஒரு மரியாதைத் தோன்ற, “அவங்களை கேளுங்க. என்று தொலைவில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவைக் காட்டினாள். ஐஸ் அமர்ந்திருந்த விதம் மதுரை மீனாட்சியே எல்ஐசி