Ashoka the 2nd

மனிதம்

“மரணத்தை எண்ணி கலக்கமாக இல்லையா?” என்று வினவினாள் அனி.  அவள் கண்களை கண்ணீர் திரையிட்டது.  “வாழ்வதற்கே கலக்கம் இருக்கும். மரணிக்க என்ன பயம்?” என்று புன்னகைக்க முயன்றான் நியான்.   “உனது வாழ்வை அபகரித்த குற்றவுணர்வு எங்களை நிம்மதியா இறக்க விடாது” என்றான் அவனது தந்தை லியோ.  “இது நானாக எடுத்த முடிவு தானே அப்பா. ஆறு வருடத்திற்கு முன்னால் இதே கணத்தை நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம். உங்களுக்கு நினைவுள்ளதா?”  “தெளிவாக உள்ளது. நமது நகரத்து விதிகளை மாற்றிய நிகழ்வு”  “ப்ச்ச்”  “அது நடந்திருக்காவிட்டால் நீ முழுமையாக வாழ்ந்திருப்பாய்”  அவன் வயிற்றில் ஒளிர்ந்த எண்களை மென்மையாகத் தடவினாள் அனி. அடர் சிகப்பில் ஒளிர்ந்த 24 என்ற எண்கள் அவன் ஆயுள் இன்னும் 24 மணி நேரமே என்பதைக் காட்டின. அவளுடைய வயிற்றில் தெரிந்த 2:6:3:18 என்ற எண்கள் இரண்டு வருடம், ஆறு மாதம், மூன்று நாள், பதினெட்டு மணி ஆயுளை குறித்தன.  மானிடோ நகரத்தின் மக்கள் தொகை பத்தாயிரத்திற்குள் இருக்கும். நீர், உணவு, இருப்பிடம் என்ற அத்தியாவசியமான தேவைகள் குறைந்து போனதால் அங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் நாற்பது வருடங்கள் மட்டும் வாழலாம் என்று நகர விதியாளர்களால் வரையறுக்கப்பட்டு இருந்தது, குழந்தை பிறந்தவுடன் தொப்புளுக்கு கீழே மைக்ரோசிப்பைப் பதித்து விடுவார்கள். அந்த குழந்தையின் ஆயுளை அட்சர சுத்தமாக காட்டியவாறு அந்த மரண கடிகாரம் வாழ்வழியும். ஆயுள் முடிகையில் டிஎன்ஏவில் பதிந்திருக்கும் மரண விதைகள் உயிர் பெற்று உயிர் இயக்கங்களை முடக்கி விடும். வலியின்றி நொடியில் மரணம்.  ஆறு வருடங்களுக்கு முன்னர் நியானுக்கு 19 வயது இருக்கையில் நடந்த நிகழ்வு அது. நியானின் தந்தை லியோவின் ஆயுள் முடிய இரண்டு நாட்கள் மீதமிருந்தது. மூவரும் மிகுந்த துயரத்தில் இருந்தனர். அப்போது நியான் ஒரு முடிவுக்கு வந்தான். அவனுடைய வாழ்நாளில் ஏழு வருடங்களைத் தந்தைக்கும், ஏழு வருடங்களைத் தாய்க்கும் கொடுக்க விரும்புவதாகவும், அதை அனுமதிக்குமாறும் விதியாளர்களின் அறக் குழுமத்திற்கும், ஊடகங்களுக்கும் ஆடியோ, வீடியோ மெயில் அனுப்பினான். ஒரே நாளில் அவனுடைய மனு பிரபலம் அடைந்தது. அனியும், லியோவும் அவனைத் தடுக்க முயன்றனர். அவனுடைய ஆயுளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். “என்னைத் தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று நியான் உறுதியாக கூறவும், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.  நிலையின் அவசரம் கருதி நகரின் அறநிலையத்தில் மறுநாள் கூடிய அனைவரும் பெரும் ஆச்சரியத்தில் இருந்தனர். அவையானது முதன்முறையாக வித்தியாசமான மனுவைப் பெற்றிருந்தது. கொல்ல வேண்டாமென்று மனுக்கள் வந்திருக்கின்றன. மக்கள் இறப்பதற்கு முன்பு கலவரம் செய்திருக்கின்றனர். சிப்பைக் கழட்டியெறிய, மற்றவர்களை கொல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஆயுளைத் தருகிறேன் என்ற கோரிக்கை புதியது. முற்றிலும் புதியது.  அறநிலைய நடுவர்கள் முப்பதிலிருந்து முப்பத்து ஐந்து வயதிற்குள் இருக்க வேண்டுமென்ற விதியால் அவை மேடையில் அமர்ந்திருந்த ஐவரும் இளைஞர்களாக இருந்தனர். நியான் அவர்களுக்கெதிரே அமர்ந்திருந்தான்.  அவையின் வலப்புறத்தில் மக்கள் பிரதிநிதிகள் இருபது பேருடன் ரேமும், லியோவும்  அமர்ந்திருந்தனர்.  இடப்புறத்தில் மனு சார்ந்த துறையினர் அமர்வது வழக்கமாதலால் நகர வளத்துறையினரும், காவல் துறை அதிகாரிகளும், மக்கள் நல நிபுணர்களும் அமர்ந்திருந்தனர். பின்புறத்தில் ஊடக நிபுணர்கள் நிறைந்திருந்தனர். நகரெங்கும் நியானின் முகமே திரைகளில் பளிச்சிட்டது. அவை எவ்வித ஓசையுமின்றி அமைதியாய் இருந்தது.  அவையிலிருந்தவர்கள் நெற்றிப்போட்டில் ஸ்க்ராம்பிளர் எனும் மெல்லிய சிப்பை ஒட்டி அத்துடன் அகல கண்ணாடி அணிந்திருந்தனர்.  கண்ணாடி பிரேமின் வலப்புறத்திலிருந்த பட்டனை ஆன் செய்து கொண்டனர்.  “நமது நகரின் விதிமுறைகளை நீ அறிவாய். அப்படியிருக்கையில் அதை  மாற்றும்படி  மனு அளித்தது ஏன்?” என்று எண்ணினார் மூத்த நடுவர். அவரது எண்ணங்கள் சொற்களாய் மாற்றப்பட்டு கண்ணாடியில் தோன்றியதும் ஆமோதித்து தலையசைத்தார். மறுகணம்  வார்த்தைகள் ஒளிபரப்ப பட்டு அனைவரது கண்ணாடியிலும் தெரிந்தது. ஸ்க்ராம்பிளரை வாய்ஸ் மோடில் வைத்திருந்தவர்களின் காதுகளில் சன்னமாக  ஒலித்தது.  நியான் இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து நின்றான்.  “அனைவரையும் வணங்குகிறேன்.  நான் எனது ஆயுளை நீட்டிக்கும்படி கேட்கவில்லை. என்னுடைய வாழ்நாளை பெற்றோருக்கு பிரித்து அளிக்குமாறே  வேண்டுகிறேன்.” நியான் தலையசைத்ததும் கண்ணாடியில் தோன்றிய எண்ணங்கள் ஒளி, ஒலியாய் பரவின.  “இது நமது விதிகளுக்கு புறம்பானது” என்றெண்ணினாள் இரண்டாவதாய் அமர்ந்திருந்தவள்.  “வாழ்வை மேம்படுத்த தானே விதிகள்?”  “இந்த விதிகள் நம்மை ஐம்பது ஆண்டுகளாக பாதுகாத்து, வழிநடத்தி வந்திருக்கின்றன”  “காலத்தின் மாறுதலுக்கேற்ப விதிகள் மாற வேண்டியது அவசியமல்லவா?”  “நீ நினைப்பதால் மட்டும் இந்த மாற்றம் நிறைவேறாது”  “அதனாலேயே அவையை நாடியிருக்கிறேன்” என்றெண்ணினான் நியான். எண்ணம் சூடேறியது.  “உனக்காக விதிகளை தளர்த்தினால் இதே போன்று பலர் மனுக்களுடன் வருவர்” என்றாள் அவள் மீண்டும்.  “உனக்கு சற்றாவது மூளை பணி செய்கிறதா? எல்லாரும் ஆயுளைக் கொடுக்க தயாராய் இருப்பார்களா?” என்று எண்ணினான் நியான் கோபத்துடன்.  வீட்டிலிருந்து புறப்படும்போதே நியானிடம் ஸ்க்ராம்பிளரை மரியாதை மோடுக்கு மாற்றும்படி அனி கூறியிருந்தாள்.   “எல்லோரும் தமது வாழ்நாளைப் பங்கிட்டு கொள்ள இசைவார்கள் என்று கூற முடியாதே மேடம்” என்று ஸ்க்ராம்பிளர் உரைமாற்றியது.  “இதற்கான காரணம் என்ன? அவர்கள் உன்னை வற்புறுத்தினார்களா?”  “இல்லை. எனது பெற்றோர் இல்லாத உலகை என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. அவர்களுடன் நான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் மரணிக்க வேண்டும்”  அவையின் நிகழ்வுகள் நகரம் முழுதும் லைவ் ரிலேயில் ஒளிபரப்பாக, மக்கள் எண்ணங்களிலேயே ஓட்டு போட துவங்கினர். நடுவர்களின் எதிரேயிருந்த ஸ்க்ரீனில் நியானுக்கு ஆதரவாய் அறுபது சதவீதத்தினரும், அவைக்கு ஆதரவாய் நாப்பது சதவீதத்தினரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.  நடுவர்களின் தலைவர் பட்டனை அழுத்தியதும் ஒலி சுவர் ஒன்று எழும்பி அவர்களின் உரையாடலை மற்றவர்கள் கேட்க முடியாமல் தடுத்தது.  “மக்கள் ஆதரவு அவனுக்கு அதிகமா உள்ளது. என்ன முடிவெடுப்பது?” என்று துவங்கினார் மூத்தவர்.  “அதை மறுத்தும் நாம் தீர்ப்பளிக்கலாம்”  “ஆனால் மக்களின் கருத்துகளை மதிப்பது அவசியம்”  “நியான் வெளிப்படுத்தும் பாசம் மக்களை மயக்குகிறது. அன்பு, பாசம் போன்ற காலாவதியான உணர்வுகள் நகரத்தை வழிநடத்த முடியாது. உறுதியான விதிகளே நமக்கு தேவை”  “இது தொடர்ந்தால் முதியவர்களின் எண்ணிக்கை கூடி விடும்”  “இதைக் குறித்து நேற்றிரவே நிபுணர்களுடன் பேசிவிட்டேன். அவர்களை நமக்கு ஆதரவா பேசுமாறு கேட்டிருக்கிறேன்”  மற்றவர்கள் தலையசைத்ததும் மூத்தவர் ஒலித்திரையை விலக்கினார். மக்கள் பிரதிநிகளை நோக்கி “உங்கள் கருத்து?” என்று கேள்வியெழுப்பினார். எண்ண அலைகள் வெள்ளமாய் ஓடி வர, சிஸ்டம் வல்லுநர்கள் ஒவ்வொரு கருத்தாய் திரைகளில்  ஒளிரச் செய்தனர்.  “நியான் வேண்டுவது முற்றிலும் சரி. ஏற்புடையது”  “இறக்க வேண்டிய இருவர் உயிருடன் இருப்பதால் மக்கள் தொகை அதிகமாகும்”  “அவை சில வருடங்களில் சீராகி விடும். உட்கொள்ளும் உணவின் அளவு மாறாது”  “அனுமதிக்கலாம். பெரிய மாற்றமேதும் ஏற்படாது”  “அடுத்த ஏழு வருடங்களுக்கான பிறப்பு எண்ணிக்கை, திருமணம் செய்து கொள்ள அனுமதி வாங்கியிருப்பவர்கள், மரணங்களின் கணக்குகள் நம்மிடம் உள்ளன. அனுமதி தரலாம்.”  “எதிர்பாராத விபத்துகளால் நமது எண்ணிக்கை குறைந்தே உள்ளது”  “அவன் கோரிக்கையை ஏற்க வேண்டாம். அவனுக்கு கவுன்சலிங் கொடுங்கள்” என்ற அனி, லியோவின் எண்ணங்கள் அடிக்கோட்டுடன் ஒளிர, அனி அழுவது திரைகளில் தெரிந்தது.  அவைத்தலைவர் “உங்களுடைய கருத்துகள்?” என்று துறை நிபுணர்களிடம் கேட்டார்.  “உறுதியான சட்டங்களே நம்மை பாதுகாத்து வருகின்றன. அதிலிருந்து விலகுவது மற்றவர்களைப் பாதிக்கும்”  “முதியவர்களின் எண்ணிக்கைகள் கூடுவதால் வியாதிகள் அதிகரிக்கும்”  “பெற்றோர் தயவில் வாழுமாறு பிள்ளைகள் வளர்க்கப்படுவார்கள். ஆயுளை கொடுக்க சொல்லி மூளைச்சலவை செய்யப்படுவார்கள்”  “முதியவர்களை கவனிப்பதால் மற்றவர்களின் நேரம் செலவாகும்”  “சற்றும் ஏற்புடையதல்ல. முதியவர்களால் நமது உற்பத்தி குறையும். வளங்கள் சீரழியும். நகரம் பாதிக்கப்படும்”   மற்றவர்களுக்கு பாதிப்பு நிகழும் என்றதும் மக்களின் ஆதரவு ஐம்பது சதவீதத்திற்கும் கீழிறங்கியது.   ‘மனிதன் தன்னை மீறியே மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிறான். அன்பு, பாசம் போன்ற உணர்வுகளை பயம் அழிக்க கூடியது’ என்று நினைத்தார் மூத்தவர்.  மூத்தவர் மீண்டும் நியானை நோக்கி கேள்வியெழுப்பினார். “உனது ஆயுளைப் பெறுவதற்கு உன்னுடைய பெற்றோர்களுக்கே விருப்பமில்லையே?”  “என் மேலிருக்கும் பாசத்தால் அவ்வாறு பேசுகிறார்கள். எனது ஆயுளை எப்படி செலவழிக்க வேண்டும் என்பது என்னைச் சேர்ந்தது”  “இவ்வாறு பிரித்தளிப்பதால் உனது ஆயுள் பெற்றோர்களின் ஆயுளை விட குறைந்து விடும். அவர்களுக்கு முன்பாக நீ இறக்க நேரிடும்”  “அது எனக்கு வரம்”  ‘பெற்றோர் இருக்கையில் மகன் இறப்பது பெற்றோர்களுக்கு சாபம்’ என்று எண்ணினான் லியோ.  மக்களின் ஆதரவு ஐம்பது ஐம்பதென்று பிரிந்திருப்பதைக் கவனித்ததும்  மூத்தவர் உத்வேகமடைந்தார். “உனது வேண்டுதல் உன்னதமானது எனினும் நமது நகரின் அடிப்படை விதிகளுக்கு புறம்பாயுள்ளது’ என்று துவங்கினார்.  தீர்ப்பின் தன்மையை முன்கூட்டியே கிரகித்த நியான் சேரில் அமர்ந்தான். இரண்டு முழங்காலுக்கும் கீழிருந்த  சின்தடிக் கால்களை கழற்றியெறிந்ததும் கால்கள் மொன்னையாய் நீட்டின. அவையில் சலசலப்பு ஏற்பட்டது.  நியான் ஸ்க்ராம்பிளரை கழட்டிவிட்டு வாய் திறந்து ஆவேசமாய் பேசினான். “புதிய தாவர டிஎன்ஏக்களை உருவாக்கும் லேபில் நடந்த விபத்தில் ஆசிட் கொட்டி எனது இரண்டு கால்களும் கருகின. டாக்டர்களால் வெட்டி எடுக்கப்பட்டன. எனக்காக எனது தாய் வேலையை உதறிவிட்டு என்னைக் கவனித்துக் கொண்டாள். எனது சிகிச்சைக்கான பணத்தை வாரியிறைத்ததில் எனது குடும்பம் பொருளாதாரத்தில் முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பிற்கு வந்தது. இருப்பினும் எனது தந்தை என்னை விலக்கியதில்லை. பெற்றோர்களின் அன்பு விதிகளுக்கு உட்படாதது. என்னைக் கொண்டே அவர்களுடைய உலகம். அவர்களே எனது உலகம். அவர்களின்றி எனது வாழ்வு அர்த்தமற்றது. எனது ஆயுளை பிரித்து அளிக்க முடியாதென்றால் அவர்கள் மரணிக்கையில் நானும் உயிர் துறக்க அனுமதியுங்கள். விதிகள் வாழட்டும்”  அவையில் சலசலப்பு அதிகமாக மூத்தவர் மீண்டும் ஒலித்திரையை எழுப்பினார். மக்களின் ஆதரவு நியானுக்கு தொன்னூற்று மூன்று சதவீதமாய் உயர்ந்தது.  “இது வரையில் மக்கள் எந்த மனுவிற்கும் இவ்வளவு ஆதரவு அளித்ததில்லை. அவனது கோரிக்கையை ஏற்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறோம்.  “இப்போது மறுத்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்”  “நமக்கு வேறு வழியில்லை. ஏற்றுக் கொள்வோம்”   மற்றவர்கள் மௌனமாய் ஆமோதிக்க, திரை உயர்ந்தது. அவை பதற்றத்தில் இருந்தது. அனைவரையும் ஒருமுறை நோக்கிய மூத்தவர் நியானை கருணையுடன் நோக்கியவாறு எண்ணினார். “மறுமணம், குழந்தை இறந்தால் இரண்டாவது குழந்தை பேறு என புதிய விதிகளை நாம் தோற்றுவித்தே வந்துள்ளோம். மீண்டுமொரு

Read More

சலோ பாய்…

சென்னையிலிருந்து போபாலுக்கு நடந்து செல்வதை நினைக்கும்போதே சுரேந்தருக்கு மலைப்பாயிருந்தது. டென்ட்டினுள் மனைவி ரேஷ்மி படுத்துக் கிடக்க, ஐந்து வயது மகனும், மூன்று வயது மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். கட்டுமானப் பணிகள் செய்ய இவர்களுடன் வந்திருந்த மேலும் ஐந்து  வடஇந்திய குடும்பங்கள் சென்னையில் தங்கியிருந்தனர். ஒரு கட்டிடம் கட்டி முடித்ததும் மற்றொரு கட்டிடத்திற்கு சூப்பர்வைசர் அழைத்துப் போவார். அங்கு டென்ட் அமைத்துக் கொள்வார்கள். போபாலை விட அதிக வேலை வாய்ப்பும், கூலியும் கிடைத்ததால் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர். வருடத்திற்கு ஒருமுறை சென்னை இனிப்பு, ஆடைகள் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு ரயிலில் சென்று உறவினர்களை பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது கொரானா நோய் தாக்கும் வரையில். கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கினால்  வேலையில்லை. கையிலிருந்த பணமும் குறைந்துவர, போன் செய்தால் சூப்பர்வைசரும் எடுப்பதில்லை. காசில்லாமல் சாப்பாட்டிற்கே சிரமப்பட வேண்டியிருக்குமோ என சுரேந்தர் பயந்து கொண்டிருந்தான். அனைவரும் சொந்த ஊருக்கு திரும்ப ஸ்பெஷல் ரயில், பஸ் விடுகிறோமென அரசு வண்ண வண்ண பட்டங்களை தினமும் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. இரு மாதங்களாக காத்து கிடந்ததுதான் மிச்சம். பட்டினியால் சாவதா, கொரோனாவால் சாவதா, போபாலுக்கு நடந்து சாவதா என்று வாழ்க்கை மூன்று விரல்களை நீட்டியது. எதுவும் செய்யாமலிருப்பதை விட சொந்த ஊருக்கு நடக்கலாமென அனைவரும் முடிவெடுத்திருந்தனர். “ஊரை விட்டு போகிறோம். பணம் கொடுத்தனுப்புங்க” என்று சூப்பர்வைசருக்கு நாலைந்து முறை வாட்ஸ்அப் குறுந்தகவல்   அனுப்பியும் எந்த பதிலுமில்லை. போன் செய்தாலும் எடுக்க மறுத்தார். இருபதாயிரத்துக்கு மேல் பாக்கியிருந்தது. இன்று புறப்படுவதாக தகவல் அனுப்பியிருந்தான். பார்த்து விட்டார் என்பதை நீல டிக்குகள் தெரிவித்தன. ஆனாலும் வரமாட்டார். நான் திரும்பி வருவேனா, இல்லையா என்றிருக்கையில் இது அவருக்கு லாபம். எங்களது இரண்டு மாத கடும் உழைப்பின் கூலி வீணாய் போய்விட்டது.    “ஆஜாவ் பாய்” என்று வெளியிலிருந்து முகேஷின் குரல் கேட்டதும் மனைவியை எழுப்பினான் சுரேந்தர். முகேஷ்  சுரேந்தரின் ஊர்க்காரன். அருகிலிருந்த ஓட்டலில் வேலை செய்தான். லீவு நாளென்றால் இங்கு வந்து விடுவான். முதல் நாள் இரவிலிருந்து அடித்த காய்ச்சலில் ரேஷ்மி கந்தல் துணியாய் கசங்கி கிடந்தாள். “வா போலாம்” என்று அவளை மறுபடியும் எழுப்பினான். வேறு வழியில்லை என அவளுக்கும் புரிந்ததால் சமாளித்து எழுந்தாள். சூட்கேசை அவள் தலையில் வைத்தான். முதுகில் பேக்கையும், தோளில் மகளையும் சுமந்து கொண்டு, மகனின் கையை பிடித்தவாறு வெளியே வந்தான். இருட்டத் தொடங்கியிருக்கையில் ஏராளமானோர் கிளம்பியிருந்தது சற்று தெம்பாக இருந்தது. சில பெண்களும் இருந்தனர்.  வெளியே வந்ததும் முகேஷ் மகளை வாங்கிக் கொண்டான். சூப்பர்வைசர் வந்து விட மாட்டாரா என அப்போதும் கண்கள் தேடின. “எந்த வழியா போறோம்” என்றான் சுரேந்தர் இந்தியில். “எங்கயாவது ரயில் ட்ராக்கை பிடிச்சிட்டா போயிட்டே இருக்கலாம் பாய்” என்றான் முகேஷ் உற்சாகத்துடன்.  இளமை அனைத்து கஷ்டங்களையும் சுவாரஸ்யமாகவே எடுத்துக் கொள்கிறது என சுரேந்தர் நினைத்தான். சாலைகள் வெறிச்சோடிக் கிடக்க ஓரிரு பைக்குகள் சென்றன. கடைகள் மூடிக்கிடந்தன. யார் வழி நடத்துகிறார் என்றில்லாமல் எறும்புகளைப் போல வரிசையாக பைகளை சுமந்து கொண்டு நடந்தனர்.  எறும்புகளாவது  ஏழை, பணக்கார பேதமின்றி பொதுவில் உழைத்து சேமித்தன. ஆறறிவுடைய மனிதன் மட்டும் சகமனிதனை சுரண்டி, ஏமாற்றி தனியே சேமித்து கொள்கிறான். கஷ்டப்படுபவர்களுக்கு சற்றும் இரக்கம் காட்ட மறுக்கிறான். வீட்டிற்கு வெளியே நாய்க்கு சோறிடுபவர்கள் கூட ஏழைக்கு சோறிட மறுத்தனர். புலம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, இருப்பிடம் வழங்கிவிட்டதாக அரசுகள் அறிவித்துக் கொண்டிருக்க, உணவிற்கு வழியில்லாமல் பிச்சையெடுக்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருந்தனர். “பெட்டிய குடு” என கேட்டதும் ரேஷ்மி மெதுவாக குனிந்தாள். பெட்டியை எடுத்து தனது தலையில் வைத்துக்  கொண்டான்.      இங்கிருந்து போபாலுக்கு கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர்கள். பஸ், லாரியென ஏதாவது நடுவில் கிடைத்தால் வேகமாக போகலாம்.  தினமும் அறுபது கிலோமீட்டர் நடந்தாலும் 25 நாட்களாகும். அதுவரையில் ரேஷ்மியால் நடக்க முடியுமா என்றிருந்தது. முன்னால் சென்றவர் ரோட்டிலிருந்து பிரிந்து ரயில் டிராக்கில் இறங்கி நடக்கத் தொடங்கினார். சிலர் டார்ச்லைட் அடித்து செல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்தனர். அரசையும், வைரஸையும் திட்டிக்கொண்டு நடந்தனர்.  ஆந்திரா போய்விட்டால் லாரி கிடைக்கும் என்றனர். யாரோ ஒருவன் ஹிந்தி பாட்டை ரேடியோவில் சத்தமாக போட்டான். சரளைக் கற்களில் நடக்க மனைவி தடுமாறுவதை பார்த்தபடியே அவளுக்கு பின்னால் நடந்தான் சுரேந்தர். லட்ச லட்சமாய் சம்பாரிக்கும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு தனி விமானத்தையும், கப்பலையும் அனுப்பி உலக அளவில் பெருமை சேர்த்துக்கொள்ளும் அரசு உள்ளூர் ஏழைகளுக்கு ரயில் அனுப்ப உடனடியாக முடிவெடுப்பதில்லை. விமானத்தில் இறந்தால் அதிகமாகவும், பஸ்ஸில் அடிபட்டு இறந்தால் குறைவாகவும் நஷ்ட ஈடு தரப்படும் நாட்டில், மரணத்தின் தராசிலும் ஏழைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. சில மணிநேரத்தில் காலியாய் கிடந்த ஸ்டேஷனைக் கண்டதும் எவனோ ஒருவன் “தொடா அராம் கர்த்தேன்” என்று கத்தினான். டிராக்கிலிருந்து மேலேறி காலியாய் கிடந்த ரயில்வே பிளாட்பார்ம் வெளிச்சத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். சுரேந்தர் அறுபது சப்பாத்திகள் செய்து மூட்டையாய் கட்டி எடுத்து வந்திருந்தான். ஊறுகாய் பாட்டிலும், இரண்டு பிஸ்கட் பாக்கெட்களும் இருந்தன. முகேஷ் யாரிடமோ பேசி விட்டு வந்தமர்ந்தான். அவன் எடுத்து வந்த சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டனர். மகள் சுரேந்தருடைய தோளில் சாய்ந்து தூங்க முயன்றாள். சிலர் பிளாட்பார்மில் படுத்தனர். அவர்களை நோக்கி வந்த ஒருவர் “இங்கெல்லாம் படுக்கக் கூடாது கிளம்புங்க” என சத்தமிட்டார். “ஏன் இது இந்தியா இல்லையா?” என்றொருவன் ஹிந்தியில் கேட்க, அவர் கோபத்துடன் திரும்பிச் சென்று ரயில்வே போலீசை கூட்டி வந்தார். அவர் இவர்களை ஹிந்தியில் விசாரித்துவிட்டு “அரைமணியில் போயிடுவாங்க.. விடுங்க” என சொல்லிவிட்டு நகர்ந்தார்.   ஸ்டேஷனில் மாட்டியிருந்த டிவியில் செய்தியாளர் “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பிச் செல்லத் தேவையில்லை. அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது” என பேசிக் கொண்டிருந்தாள். சொந்த வீட்டு நிழலில் அமர்ந்து இந்த செய்தியை கேட்பவர்களுக்கு அரசின் துரித செயல்கள் மிகுந்த பெருமையை அளிக்குமென சுரேந்தர் நினைத்தான். சிரிப்பாக வந்தது. அரைமணி நேரத்தில் மீண்டும் “சலோ சலோ” என எழுப்பும் சத்தம் கேட்டது. பிளாட்பாரத்தில் தண்ணீர் பிடித்து, உடமைகளை தூக்கிக்கொண்டு புறப்பட்டனர்.  முகேஷ் மகளை வாங்க, சுரேந்தர் மகனை தூக்கிக் கொண்டான்.        “நைட்டுல நடந்தா நிறைய தூரம் போலாம். பகல் வெயிலுல இப்படி போவ முடியாது” என்றான் முகேஷ். “இதே வேகத்துல எல்லாத்தாலும் தொடர்ந்து நடக்கவும் முடியாது” என்றான் சுரேந்தர் மனைவியை நினைத்தவாறு. “குறுக்கு வழி ஏதாவது இருக்குமா?” “ஓங்கோல்ல இருந்து கம்மத்துக்கு ரோட்டுல போறது பக்கம். ட்ரெயின் ரூட்டு சுத்து. போயி சேர மாட்டோம்” “செத்தாலும் சொந்த ஊருக்கு போயி சாவோம் பாய்” “சாவறதுக்கு எங்க செத்தா என்ன? வாழ்றதா இருந்தாதான் சொந்த ஊருக்கு போவணும்” இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். சற்று நேரத்தில் பேச்சும் நின்று போக, கால்களுக்கு தனியாக உயிர் இருப்பதுபோல தாமாக சென்றன. சரளைக் கற்கள் கதறும் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.  இரவில் மூன்று முறை பிளாட்பார்மில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். பெண்கள் கஷ்டப்படுவது கண்கூடாக தெரிந்தது. ரேஷ்மி இரண்டு முறை சேலை தடுக்கி விழுந்தாள்.  “நடந்துருவியா” என்று சுரேந்தர் கேட்க, “ம்” என்றவாறு முந்தானையால் தலையை போர்த்திக்கொண்டாள். எதுவும் செய்ய முடியாமலிருப்பது கஷ்டமாக இருந்தது. வேறு வழியுமில்லை. சொந்த ஊர்க்காரர்கள் அனைவரும் போன பின்னர் இங்கே தனித்து என்ன செய்ய இயலும்.      சுரேந்தரின் கால்கள் நடுங்கின. பாரத்தினால் கழுத்து, தோள், முதுகென உடல் மொத்தமும் வலியில் துடித்தது. மூச்சிழுக்கவே சிரமமாய் இருந்தது. வலியை நினைக்காமல் பத்தாவது படிக்கையில் ஸ்கூல் பர்ஸ்ட் வந்ததையும், தொடர்ந்து படிக்க வழியில்லாமல் கடையில் வேலைக்கு சேர்ந்ததையும் நினைத்துக் கொண்டான். ரேஷ்மியை பெண் பார்த்தது, திருமணம் செய்தது, முதல் குழந்தை பிறந்ததென மகிழ்வான நாட்களை அசைபோட்டான். நினைவுகள் வலியை பின்னுக்கு தள்ளின. மகனுடைய நெஞ்சுக்கூடு துடிப்பதையும், காதுக்கருகில் மூச்சிழுப்பதையும் உணர முடிந்தது. அவனுடைய உடல் சூடு மனதுக்கு வலிமையை தந்தது. குழந்தைகளையாவது உயிருடன் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்ற வெறியுடன் நடந்தான்.  இரண்டாம் நாள் ஆந்திரா எல்லைக்குள் நுழைந்து ஏதோவொரு பிளாட்பார்மை சென்றடைந்தனர். அனைவரும் அமர்ந்திருக்கையில் திடீரென அங்கு வந்த நாலைந்து போலீஸ்காரர்கள் எவரையும் எதுவும் கேட்காமல் லத்தியால் அடிக்கத் தொடங்கினர். சிலர் “எதுக்கு அடிக்கிறீங்க?” என்று எதிர்த்து நிற்க… “எங்க ஊருக்குள்ள எதுக்குடா நுழையறீங்க?  இங்கயும் நோயை பரப்பவா ? என்று ஹிந்தியில் கத்தினார் ஒருவர் . “சோத்துக்கு வழியில்ல சார். சொந்த ஊருக்கு போறோம்” “அரசாங்கம் நடந்து போவாதன்னு சொல்றத மீறி, நீங்க பாட்டுக்கு கிளம்பிப்போனா என்னடா அர்த்தம்” “அவங்களுக்கு இது கவுரவ பிரச்னை. எங்களுக்கு உயிர் பிரச்னை” “எல்லா ஏற்பாடையும் பண்றேன்னு சொல்லுறாங்க.  அப்புறமென்ன நோவுது” “எப்ப பண்றது? நாங்க செத்ததுக்கு அப்புறமா. சோறு போடுங்க.  இங்கயே இருந்து வேலை செய்றோம்” “உங்க ஊர்ல இருக்க வேண்டியதுதானே. இங்க எதுக்கு வந்தீங்க?” “நீங்க படிச்சிட்டு வெளிநாட்டுக்கு சம்பாரிக்க போவலயா. அது உங்களுக்கு பெருமையாய் இருக்கைல நாங்க வந்தா எரியுதா? இதே மாதிரி வெளிநாட்டுக்காரன் உங்கள் புள்ளைங்கள அடிச்சா?” அவர்களுக்கு பதிலேதும் கொடுக்க முடியாமலிருக்கையில் கேள்வி கேட்டவனை மீண்டும் அடித்தனர். பேசும் குரலில் உண்மை இருந்தபோது மகாத்மாவை விட்டு விலகிச் சென்றது ஆங்கிலேய அரசாங்கம். கேள்வியில் நியாயம் இருந்தபோது, கேள்வி கேட்டவனை அடித்து நொறுக்கியது சொந்த அரசாங்கம். ஏற்கனவே உடல் வலியிலிருந்தவன் கீழே விழுந்து கதற, மற்றவர்களையும்  அடித்தனர். “எல்லாரையும் அரஸ்ட் பண்ணு” “அரெஸ்ட் பண்ணி எங்க கொண்டு போய் சோறு போடுறது நடந்துபோயி சாவட்டும் விடு” மீண்டுமொருமுறை வெறுப்புடன் அடித்து விட்டு விலகினர். குழந்தைகளுடன் இருந்ததால் சுரேந்தரை அடிக்காமல் விட்டுச் சென்றனர். “சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையறவங்க நாமதான்” என்ற முகேஷின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவனுடைய கன்னம் வீங்கியிருந்தது.    “கொரானா வந்துரும் எங்க எல்லைக்குள்ள வராதன்னு சொல்ற இதே ஊருக்காரன், ஸ்டேட்டுகாரனுங்க அத்தனைபேரும் நாளைக்கு தண்ணி வேணும், நிலம் வேணும்னு பக்கத்து நாட்டுக்காரன்கிட்ட நியாயம் பேசுவானுங்க” “ஆளை

Read More

கூண்டுக்கிளி

சிகாகோ ஏர்போர்ட் நுழைவு வாயிலில் வந்து நின்ற காரிலிருந்து பரத் இறங்கினான். பயணிகளை உதிர்த்துச் செல்ல இரண்டு நிமிடமே அனுமதிக்கப்பட்டிருக்க, டிக்கியை திறந்து வேகமாக டிராலி பேக்கை எடுத்தான். பின் சீட்டு கண்ணாடியருகே குனிகையில், டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த மனைவி வர்ஷா கண்ணாடியைக் கீழிறக்கினாள். சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருந்த ஆறு வயது மகனின் தலையைக் கலைத்து, இரண்டு வயது மகளின் கன்னத்தைக் கிள்ளி, ‘பீ குட்” என்றான். பொம்மைகள் போல இருவரும் தலையசைத்தனர்.“பை” என்று மனைவியை நோக்கி கையசைத்தான்.“இந்தியாவில் கொரோனா இன்னும் முடியலையாம். பாத்து இருங்க… கால் பண்ணுங்க” என்றாள் ஆயிரமாவது முறையாய். கொரோனா அலை ஓய்ந்து இன்னும் ஆபீஸ் திறக்கவில்லை. வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்பொது போனால் தான். ஆபீஸ் திறந்து விட்டால் லீவ் கிடைக்காது.தம்ஸ் அப் காட்டிவிட்டு செக்யூரிட்டியை நோக்கி நடந்தான். பாஸ்போர்ட், பிளைட் டிக்கெட், ஐடி கார்டுடன் கொரோனா நெகடிவ் சர்டிபிகேட்டைக் காட்டி உடல் பரிசோதனைகளைக் கடந்து ஏர்போர்ட் என்ற கண்ணாடி உலகினுள் நுழைந்தான்.மெல்லிய குளிரும் மெட்டல் குரலும் வரவேற்க, எழுத்துகள் வரிவரியாய் உருண்டு கொண்டிருந்தன. உதடுகள் ஏகமாய்ச் சிவந்திருந்த பெண்ணிடம் டிக்கெட்டை காட்டி, இமிக்ரேஷனைக் கடந்து ஏர் இந்தியா பிளேனுக்குள் ஏறுவதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. பொம்மைகளைப் போலிருந்த பெண்கள் பிளேன் வெடித்தால், கடலில் விழுந்தால் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்க, சீட்டைச் சரித்து சாய்ந்து அமர்ந்தான். இடப்புற வரிசையில் அமர்ந்திருந்த முதிய பெண் அவனது அம்மா சுஜாதா போலிருக்க மனம் திடுக்கென்றது. அம்மாவிடம் இரண்டு வருடங்கள் எப்படி பேசாமல் இருந்தோமென்று நினைக்க, அவன் மீதே வெறுப்பாய் இருந்தது. மெதுவாக நடந்து ஈசி சேரில் அமர்ந்த சுஜாதாவிற்கு வயது 65 இருக்கும். வயதுக்கு மீறிய தளர்வை மனம் தந்திருந்தது. சென்னை கொளத்தூரிலிருந்த வால்கிரீன் அபார்ட்மெண்டின் முப்பதாவது மாடியில் அவளது வீடு இருந்தது. ஜன்னலுக்கு வெளியே வானம் கடல் போல் பரவியிருக்க, மேகம் அலையடித்துக் கொண்டிருந்தது.கணவன் ரமேஷ் இறந்த பின்னர் வீடு முழுதும் தனிமையே நிரம்பியிருந்தது. கோவிட் ஊரடங்கிற்கு பின்னர் வேலைக்காரியும் நின்று விட, வாழ்வு நொண்டியடித்துக் கொண்டிருந்தது. போன் செய்தால் கீழிருக்கும் குரோசரி ஷாப்பிலிருந்து தேவையானவை வரும். மற்ற நேரத்தில் நூடுல்ஸ், பிரட், ஜாம் என்று வாழ்வைக் கடத்திக் கொண்டிருந்தாள்.வானில் இங்குமங்கும் பறக்கும் பறவைகளைப் பார்த்தபடி சற்று நேரம் இருந்தாள். ரிமோட்டை அழுத்தியதும் வலப்புற சுவரிலிருந்த டிவி உயிர் பெற்றது. யாரோ ஒரு இளவயது ஹீரோ காதலிக்கு தாஜ்மஹாலை கட்டுவதாக பாடிக் கொண்டிருந்தான். திருச்சி பிஷப் ஹீபர் காலேஜில் சுஜாதாவும், ரமேசும் காதலித்த போது ரமேஷ் அவளுக்காக தாஜ்மஹால் கட்டுவதாக கூறியது ஞாபகம் வந்தது.ஆங்கில லெக்சரராய் அவள் சேர்ந்த போது அவன் ஏற்கனவே மேத்ஸ் டிபார்ட்மென்டில் சீனியர். “உங்க கிளாஸை நான் எடுத்துக்கட்டுமா?” என்று துவங்கிய பேச்சு, “எந்த ஹீரோ பிடிக்கும்?” என்று தொடர்ந்து “உங்களை லவ் பண்றேன்னு சொன்னா பிரச்னையா போயிரும். அதனால என்னைக் கல்யாணம் பண்ணி கண் கலங்காம பாத்துக்கிறீங்களா?” என்று முடிந்தது. மற்றொரு வகையில் துவங்கியது.நாச்சியார் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் என்று பக்தியுடன் காதல் வளர்ந்தது. பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் சம்மதிக்க மறுக்க இரண்டு வருடங்கள் போராடி பார்த்து விட்டு முடியாமல் பம்பாய்க்கு புறப்பட்டனர். அங்கேயே திருமணமும் செய்து கொண்டனர். ரமேசுக்கு காலேஜ் ஒன்றிலும் சுஜாதாவிற்கு பிரைவேட் கம்பெனி ஒன்றிலும் வேலை கிடைக்க வாழ்வு ரம்மியமாக சென்றது.இரண்டு வீட்டுக்காரர்களும் இவர்களைத் தேடவில்லை என்பது பின்னர் தெரிந்தது. பிரெண்ட் ஒருத்திக்கு போன் செய்து விசாரித்தபோது அவளைத் தலைமுழுகி விட்டதாக அவளின் தங்கை கூறியதாக கூறினாள்.பெற்றோரைப் பிரிந்து அவனுடன் சென்றதாலோ என்னவோ ரமேஷ் அவளை உயிராகத் தாங்கினான். திடீர் திடீரென பரிசுகளைக் கொண்டு வருவான். சிறிய ஆசைகளையும் நிறைவேற்றி அழகு பார்ப்பான். பார்க், பீச், தியேட்டர் என அவர்களின் கால்கள் பதிக்காத பொழுதுபோக்கு இடங்கள் கிடையாது. கிச்சனில் உதவுவதிலிருந்து, துணி துவைப்பது வரை கூடவே சுற்றி வருவான். அவனுக்காக அவளும் வாழ்ந்து பழகினாள். அவளுக்கு பிடிக்காதிருந்தாலும் அவனுக்காக மல்லிகை பூ வைத்துக் கொண்டாள். கையில் மெகந்தியுடன் அவனைக் கட்டிக்கொண்டு இரவில் படுத்திருக்க, மறுநாள் அவன் கன்னத்தில் மெகந்தி பூக்கள் பதிந்திருந்தன. காலேஜ்க்கு போய் வந்ததும் “நண்பர்களும், மாணவர்களும் கேலியும், கிண்டலுமாய் ஒரு வழி செய்து விட்டனர்” என்றான்.பரத் பிறக்க இரண்டு மாதங்கள் இருக்கையில் சுஜாதா வேலையை விட்டாள். பெற்றோரைப் பிரிந்து ரமேசுடன் சென்று விட்டாலும் சுஜாதாவுக்கு எதையோ பறிகொடுத்த உணர்வு இருந்தது. தீராத தாகம் போல் உயிர் வருத்தியது. பரத் பிறந்ததும் உடலில் கங்கை ஊற்றெடுக்க, அவளின் தாகம் தீர்ந்தது. பரத்தைப் பார்க்கையில், ரமேஷை நேசிப்பதை விட அதிகமாக ஒருவனை நேசிக்க முடியுமா என்று வியப்பாள். பம்பாயில் அம்மாவுடன் இருந்த நாட்கள் பரத்துக்கு பசுமையாக ஞாபகத்தில் இருந்தன. அவளைக் கட்டிப் பிடிக்கையில் கோவில் கர்ப்பகிரகத்தின் வாசமடிக்கும். வீட்டில் இருக்கும்போதும் அவள் நேர்த்தியாக கட்டியிருக்கும் காட்டன் புடவை, சாமி படத்திற்கு போக தலையில் வைக்கும் துண்டு மல்லி என்று அனைத்தும் ஞாபகம் இருந்தது. அருகிலிருக்கும் பார்க்கிற்கு செல்லுகையில் விரலைப் பிடித்துக் கொள்ள அவள் நீட்டும் மெஹந்தி விரல் ஞாபகம் இருந்தது.ஒரு முறை வயிற்று கட்டிக்காக ஆப்ரேஷன் செய்து அவள் ஐசியூவில் படுத்திருக்கையில் அழுது, புரண்டு அன்றிரவு அவனும் ஐசியூவில் படுத்துக் கொண்டான். தன்னுடன் படிப்பவர்களுக்கு மாமா, அத்தை என்று உறவினர்கள் இருக்க தனக்கு மட்டும் ஏன் எவருமில்லை என்று கேட்பான். “நாங்கள் இருவரும் அனாதையாய் இருந்து திருமணம் செய்தவர்கள்” என்பாள் அம்மா. நிறைய சொந்தக்காரர்கள் இருக்கும் சினிமாக்களைப் பார்க்கையில் அவளுக்கு கண்ணீர் திரளும். பரத் அவளைக் கிண்டல் செய்து சிரிப்பான்.வீட்டில் இருவரும் தமிழில் பேசியதால் பரத்துக்கு தமிழில் பேச மட்டும் தெரிந்தது. அவன் ஸ்கூல் முடித்து, எஞ்சினியரிங் நுழைவுத் தேர்வு எழுதியதும் சென்னை ஐஐடியில் அட்மிசன் கிடைத்தது. “யாருக்கும் ஈஸியா சீட் கிடைக்காதும்மா” என்று நச்சரிக்க, அவனுடைய எதிர்காலத்தை வீணாக்க கூடாதென சென்னைக்கு வருவதற்கு பெற்றோர் சம்மதித்தனர்.சென்னை வந்த சில மாதங்களுக்கு பின்னரே அம்மா வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்ததை கூறினாள். இருவரின் சொந்தங்களும் திருச்சியில் இருப்பதாக சொன்னதை கேட்டு சந்தோஷப்பட்டான். அவர்களைப் பார்த்து வரலாமா என்று கேட்டதற்கு மறுத்து விட்டனர். குடும்பத்துடன் சென்னைக்கு வந்த பின்னரும் இரண்டு வருடங்கள் எவரையும் தேடிப் போகாமல் இருந்தனர். ரமேஷின் தம்பி சென்னையிலேயே இருப்பது தற்செயலாய் தெரிய வந்தது. அவர் ஒரு முறை வீட்டிற்கு வந்து அனைவரையும் பார்த்து சென்றார். ரமேஷ் வீட்டை விட்டு ஓடியதால் தங்கைக்கு வரன் தேடுவதில் சிரமம் இருந்ததையும், பெற்றோர் இருவரும் இறக்கும் வரையில் அவனைப் பற்றி பேச விரும்பாததையும் கூறினார். “வீட்டுக்கு வாங்ளேன்” என்று பெயருக்கு அழைத்தார்.சுஜாதாவின் பெற்றோரும் இறந்து விட்டனர் என்பது பின்னர் தெரிய வந்தது. அவளது தங்கை திருச்சியிலேயே வசித்து கொண்டிருக்க, சுஜாதா மட்டும் ஓரிரு முறை திருச்சி சென்று வந்தாள். திருச்சி காவிரி கரையில் நிற்கையில் எதற்காக அழுதாள் என்று இன்னமும் விளங்கவில்லை. சிறு வயதில் தந்தை, தங்கையுடன் வந்து குளித்ததை நினைத்தா, மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலுக்கு போட்டி போட்டு படியில் ஓடி தங்கையை உருட்டி விட்டு அடி வாங்கியதை நினைத்தா, மாதமொரு முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அம்மாவுடன் செல்கையில் சாமி பூவை அம்மா தலைக்கு வைத்து விடுவதை நினைத்தா, எதையெண்ணி அழுதாள் என்று தெரியவில்லை.அவளை மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எவருக்கும் உடன்பாடில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. தங்கச்சி மட்டும் கண்கள் கலங்க சற்று நேரம் பேசினாள். “ஏண்டி போன?” என்பதை மட்டும் இரண்டு முறை கேட்டாள்.சென்னை வந்ததும் “எல்லாரும் நல்லா இருக்காங்க” என்று சுஜாதா முடித்துக்கொண்டாள். ரமேஷ் சிலரிடம் போன் செய்து பேசி விட்டு அத்துடன் விட்டு விட்டான் என்பது தெரிந்தது. அவன் எதையும் சொல்லாமலிருக்க, இவளும் எதையும் கேட்கவில்லை. சென்னையோ, மும்பையோ இவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பது தெரிந்தது.பரத் பிஜி படித்து முடித்ததும் “அமெரிக்காவுல வேலை கிடைச்சிருக்கு. போறேன்” என்று சொன்னபோது அதிகம் உடைந்தது ரமேஷ்தான். மகனுக்கு சிறகுகள் முளைத்தது புரியாமல் “சென்னைலயே வேலைக்கு போ” என்று கண்டித்து பார்த்தான். “நாலஞ்சி வருடம் வேலை பாத்துட்டு வந்துடுறேன்” என்று பரத் உறுதியாக கூற, “உன்னை விட்டா எங்களுக்கு யாரும் இல்லடா” என்று சொல்ல முடியாமல் அவர் தவித்தது பரத்துக்கு புரியவில்லை. அமெரிக்காவில் பெரிய கம்பெனியில் வேலைக் கிடைப்பது குதிரைக் கொம்பு மட்டுமல்ல. பெருமையான விசயமும் கூட. பரத் சென்னையில் பிஜி முடித்தவுடன் அமெரிக்காவிலிருக்கும் கூகிள் கம்பெனியில் நல்ல வேலை கிடைக்க, “போக வேண்டாம்” என்று அப்பா தடுத்தது பரத்துக்கு கடுப்பாக இருந்தது. இருவரும் காரசாரமாய் பேசிக்கொண்டது அப்போது தான்.அமெரிக்கா வந்ததும் அதன் வாழ்வுமுறையும் சம்பளமும் பிடித்துப் போக மீண்டும் இந்தியா செல்ல மனமில்லாமல் போனது. நான்கு வருடங்களுக்கும் பின்னர் அவனுடைய கம்பெனியில் வர்ஷா வேலைக்கு சேர்ந்தாள். அவளும் சென்னையைச் சேர்ந்தவள் என்பது நெருக்கத்தை ஏற்படுத்த, இருவரும் காதலிக்கத் துவங்கினர்.இருதரப்பு சம்மதத்துடன் சென்னையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே வர்ஷாவுக்கும் அவனது பெற்றோருக்கும் ஏனோ ஒத்து போகவில்லை என்பதை பரத் புரிந்து கொண்டான். அவன் இஷ்டப்படி திருமணம் செய்தது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. காதலித்து திருமணம் செய்த இருவர் அவனை புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது. மூச்சு விடுவது சிரமமாயிருக்க, ஈஸிச்சேரிலிருந்து எழுந்த சுஜாதா இன்ஹேலரைத் தேடியெடுத்து இரு முறை உறிஞ்சினாள். நெஞ்சில் பனி உருகுவது போலிருந்தது. களைப்பாய் இருந்தது. கொஞ்சம் வெந்நீரைக் குடித்துவிட்டு மீண்டும் சேரில் அமர்ந்தாள்.ரமேஷ் எப்போதும் அமர்வது அந்த ஈஸிச்சேரில் தான். பேசுவது தேவையில்லாமல் போன தருணங்களில் இதில் அமர்ந்து வெளியுலகைக் பார்த்துக் கொண்டிருப்பான். அவனுடைய அமைதியில் ஒரு துயரம் இறுகியிருக்கும். “என்னங்க?” என்றால், சிரித்தபடி பேசுவான். அந்த பொய்யான மலர்ச்சி அவளின் மனதை கிழித்தெறியும். வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வருந்துகிறானோ என்றெண்ணுவாள். ஒரு முறை வாய் திறந்து கேட்டும் விட்டாள்.“என்னோட வாழ்வை மாத்தி எழுதறதா

Read More

மெடூசா

வருடம் 2080 அல்லது 2081க இருக்க வேண்டும்.  என்னவாயிருந்தால் என்ன. நாளை காலை விஞ்ஞானி ரான் உயிரோடிருக்கமாட்டார்.  விஞ்ஞானியா இல்ல அறிவியலாரா? எது சரியான தமிழ் பதம்?  யாருக்கென்ன.  ரானுக்கு இன்றே கடைசி தினம்.  2052ல் தொடங்கி பூமியில் நிலவிய அதீத வெப்பத்தால், பனி மலைகள் உருகின. கடல் மட்டம் உயர்ந்து, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளால் உலகின் பெரும்பாலான நாடுகள் மூழ்கிய பின் எஞ்சியிருந்தவர்கள் தீவு போன்ற இந்த நிலப்பரப்பில் தங்கத்தொடங்கி பல வருடங்கள் ஆகி விட்டன. இது போன்ற இன்னும் சில இடங்களில் மக்கள் இருக்கலாம் என நம்பிக்கை.  சின்ன காலனியாக மக்கள் இருக்கும் இந்த இடத்தின் பெயர் “மெடூசா”. தீவில் மொத்தம் 300 பேர்கள்.  ஆண்கள் 164 பேர். மீதம் பெண்கள். இந்த விகிதாச்சாரம் அடிக்கடி கூடும், குறையும். முடிந்தவரை அதிகமாகாமல் பார்த்துக்கொள்வதே பெரிய பிரச்னையாய் இருந்தது. ஒரு இயற்கையான தீவாக இல்லாமல் நீரில் மூழ்காத உயர்ந்த நிலமாக இருந்ததால் ஒரு தீவுக்கான தாவரங்கள் இல்லை. அதனால் உணவுப்பொருட்களை உருவாக்குவது முக்கிய பிரச்சனையாய் இருந்தது. மக்கள் இந்த தீவில் தஞ்சமடைந்த போது  வந்த முதல்வர்களில்  ரானும் ஒருவர்.  வசதிகள் குறைந்த அந்த தீவில் மறுபடியும் வாட்ச், சோலார் பேனல், மின்சாரம், கம்ப்யூட்டர் போன்ற பழைய பூமியில் இருந்த பல பொருட்களை மீண்டும் திரும்ப கொண்டு வந்தவர் ரான்.  பல இடர்பாடுகளை சந்தித்து தீவை இன்றைய நாகரீக          நிலைக்கு உயர்த்தியவர்களுள் ரான் முதல்மையானவர்.  ரான் அந்த இயந்திரத்தின் கடைசிக்கட்ட சரிபார்ப்புகள் செய்து கொண்டிருந்தார். அவருடன் நின்று கொண்டிருந்த இளைஞனின் பெயர் மான்டி. அவரது துடிப்பான அசிஸ்டன்ட். 25 வயது இளைஞன்.  இந்த தீவில் பிறந்தவன். மற்றொரு விஞ்ஞானி. மான்டியை  போல மேலும் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரானினால் விஞ்ஞானம் பயிற்றுவிக்கப் பட்டு வந்தனர்.  அவர்களுள் மான்டியே வயதில் பெரியவன்.  கம்ப்யூட்டர் மென்பொருள், கோடிங் எழுதுவதில் நிபுணன். இன்றைய தினத்தில் இந்த மெஷின்தான் ரானின் உயிரை காப்பாற்றப்போகிறது. ரானுக்கு மான்டியை   நினைக்கும்போது தான் சற்று வருத்தமாக இருந்தது. இவருக்காக உயிரை, உடலை  விடப்போகிறவன்.  அவனுக்கு தெரியாமலேயே.  60 வயதானவர்கள் அந்த தீவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். இது அந்த தீவின் எழுதப்பட்ட விதி. இந்த விதியை உருவாக்கியவர்களில் ரானும் ஒருவர். உணவு, உடை மற்றும் நீருக்கு தினமும் போராடிக் கொண்டிருந்ததால் இந்த விதி இயற்றப்பட்டது. ஒரு கட்டுமரம், சில நாள் உணவு மற்றும் நீருடன் வலுக்கட்டாயமாக அந்த தீவிலிருந்து அனுப்பிவைக்கப் படுவார்கள். வெளியே போக மறுத்தால் நீரில் அமுக்கி கொல்லப்படுவார்கள். சற்று மோசமான நிகழ்வே என்றாலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் தன்னிறைவு அடையும் வரை வேறு வழியும்  இல்லாதிருந்தது. அப்படி வெளியே செல்பவர்கள் வேறு ஏதும் தீவை அடைந்தால், அந்த தீவு மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் இது உதவும் என்பதால் ஆரம்பத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.  மான்டிக்கு ரானைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது.  பொதுவாக 60 வயதில் வெளியேற்றப்பட இருப்பவர்கள் அழுதுபுரண்டதை தான் பார்த்திருக்கிறான்.  “முடிவு நாள்” எனப்படும் வெளியேற்றும் நாள் வரும் முன்னரே கடலில் தனியே போனால் என்னாகுமோ என்ற பயத்திலும், தீவை விட்டு போகும் கவலையிலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் உண்டு. தீவில் இருந்து சென்ற பின் எங்கெங்கோ சுற்றி, இறந்த பின் அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் படகுடன் இந்த தீவிலேயே கரை ஒதுங்கிய  பரிதாபங்களும் உண்டு.  ஆனால் ரானோ சற்றும் கவலையின்றி கடைசிநாள் வரை வேலை செய்து கொண்டிருக்கிறார். ரானை தீவை விட்டு அனுப்புவதற்கு விலக்கு கோரி மான்டி  “தீவின் முதல்வர்கள்” எனப்படும் விதி அமைப்பவர்களுடன் பல முறை போராடியிருந்தான்.  தீவின் முதல்வர்கள் எனப்படுவது மொத்தம் 20   பேர்களைக்  கொண்ட அமைப்பு.  ஏதாவது ஒரு தளத்தில் சிறந்து விளங்குபவர்கள் முதல்வராக தேர்வு செய்யப் பட்டிருந்தனர்.  இதிலிருந்து ஒருவர் வெளியேறினால் மீதமுள்ள பத்தொன்பது பேர் ஒரு நபரை தேர்வு செய்வர்.  தீவு உருவான போது முதலில் துவங்கப்பட்ட முதல்வர்கள் அமைப்பில் இப்போது ரானைத் தவிர மேலும் நான்கு உறுப்பினர்களே பழைய முதல்வர்கள். மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டு  விட்டனர்.  அவ்வாறு அனுப்ப பட்டவர்களுள் மருத்துவர்கள், பொறியாளர்கள், பயிர்களை உருவாக்கத் தெரிந்த விவசாயிகள் போன்ற மனிதன் உயிர் வாழ இன்றியமையாதவர்கள் இருந்து வந்தனர். அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் தீவை விட்டு விலகும் முன் அவர்களின் அறிவை, அனுபவத்தை அடுத்தவருக்கு படிப்பித்து விட்டு போக வேண்டும். விலக்கு கோரக் கூடாது என்பது முதன்மை விதிகளில் ஒன்று. தீவை விட்டு வெளியேற்றப்பட்ட ஒவ்வொருவரும் முக்கியமானவராகவே  இருந்து வந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் யாருக்கும் விலக்கு தரப்படவில்லை. எனவே ரானுக்கும் விலக்கு  மறுக்கப்பட்டது. ஆனால் மான்டி ரானின் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தவன். சிறுவயதிலிருந்தே ரானிடம் பயிற்சி பெற்றவன்.  அவரை பிரிவது அவனுக்கு மிகுந்த வேதனையை தந்தது. இப்போது  அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையை மாற்ற “என்ன செய்யும் இந்த தலை கவசங்கள் புரொபஸர்” என்றான். “அந்த வோல்டஜை சற்று அதிகப் படுத்து ” என்றார் ரான் .  வோல்டேஜை சரி செய்த மான்டியிடம் “அறிவு என்பது என்ன” என்றார் ரான். “புத்திசாலித்தனம்”. “வேறு ஏதாவது ?” “நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது. மேலும் அதை பயன்படுத்தி  முடிவுகளை எடுப்பது”  “சரி, எனது மூளையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும், ஒரு பிரதி எடுத்து உன் மூளையில் பதித்தால்  என்ன ஆகும்? “வாவ்! அருமையாக இருக்கும். நானும் உங்களை போல் புது விஷயங்களை கண்டு பிடிக்க முடியும்.  ஆனால் எப்படி சாத்தியம்”. “அதற்குதான் இந்த கருவி. நீ சொன்ன அனைத்தும் மூளையின் மேற்பரப்பில் உள்ள சுருக்கங்களில் பதிந்து உள்ளது. கம்ப்யூட்டரில் ஒரு இடத்தில் உள்ள டேட்டாவை பிரதி எடுத்து மற்றொரு இடத்தில் சேமிப்பது போல.  என் மூளையில் உள்ள அனைத்து விஷயங்களும் உன் மூளைக்கு வந்து விடும்.” “அருமை புரொபஸர். ஆனால் இது வேலை செய்யுமா?” “செய்யும்.  இல்லை என்றாலும் ஏதும் பாதிப்பு இல்லை. எனக்கு பின்னர் நீ தொடர்ந்து முயற்சி செய்.  ஆனால் ரானுக்கு மட்டும் தான் தெரியும். இந்த தலைக்கவசம் இருவரின் மூளையில் உள்ள நினைவுகளை பிரதி எடுத்துக் கொள்ளும். பின்னர்  இருவரின் மூளையில் உள்ள நினைவுகளை முற்றிலும் அழித்துவிட்டு, மற்றவரின் நினைவுகளை பதித்துவிடும்.  எனவே இருவரும் கண் விழிக்கும்போது ரானின் உடலில் மான்டியின் நினைவுகளும், மான்டியின் உடலில் ரானின் நினைவுகளும் இருக்கும்.    இதன் மூலம் ரானுக்கு அதே அறிவுடன்,  நினைவுகளுடன்  புதிய உடல் கிடைக்கும். அவரும் அழிய மாட்டார்.  மான்டி ரானின் உடலுடன் தீவை விட்டு வெளியேற்றப்பட, மான்டியின் உடலில் அனைத்து நினைவுகளுடன் ரான் உயிர் வாழ்வார். ரானுக்கு இது கஷ்டமானதாக இருந்தாலும், அவருக்கு 60 வயது நெருங்க தொடங்கும்போதே பயம் வந்து விட்டது. தனியாக  நீரில் சென்று இறப்பதை தவிர்க்கவே இந்த செயலை செய்யத் துணிந்தார். இந்த கண்டுபிடிப்பு நவீன கூடு விட்டு கூடு பாயும் வித்தை. இனி ரான் அழிவே இல்லாத பரமாத்மா.  அடுத்த வேலை உடனடியாக வயதில் குறைந்த சிறுவனை புதிய அசிஸ்டென்ட்டாக  சேர்த்துக்கொள்வதே!  அடுத்து மாறப் போகும் புதிய உடலுக்காக! அப்போது முதல்வர்கள் ரானை பார்க்க வருவதாக ஒருவர் வந்து சொன்னவுடன் ரானும், மான்டியும்  எழுந்து வெளியே வந்தார்கள்.  தீவை விட்டு “முடிவு நாளில்” மனிதர்களை அனுப்பும் முதல் நாள் இரவு முதல்வர்கள் அனைவரும் வந்து அனுப்பப் படுபவருடன் இரவு உணவு சாப்பிடுவது அந்த தீவின் நடைமுறை. காலையில் கடலுக்கு அனுப்பி வைக்கும்போது தீவை விட்டு செல்பவர்களால்  சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் வீரர்கள் மட்டுமே வருவார்கள். இரவு அழுது ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கம் தெரியாமலேயே அடுத்த நாள் அனுப்பி வைத்ததும் உண்டு.   முதல்வர்களின் பின்னால் பலர் சிறந்த உணவு வகைகளை எடுத்து வந்தனர்.  ரான் அமைதியாக அனைவரையும் வரவேற்க, அவரின் அமைதியான நடவடிக்கையைப்  பார்த்து முதல்வர்களுக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அனைவரும் இரவு உணவு சாப்பிட அமர்ந்ததும் ரான் பேசலானார். “இந்த தீவிற்கு மேலும் பல திட்டங்களை உருவாக்க எண்ணினேன்.  ஆனால் காலம் போதவில்லை. என்னால் முடிந்தவரை செயலாற்றி உள்ளேன்.  கடல் நீரின் அளவு முன்பு இருந்ததை விட ஏதோ ஒரு காரணத்தினால் குறைந்துள்ளது. அதனால் தீவினுடைய நிலப்பரப்பு நாம் வந்த காலத்தில் இருந்ததை விட இருமடங்கு ஆகியுள்ளது.  நாம் உணவு தயாரிக்க முறையிலும் பெருமளவு முன்னேறி உள்ளோம்.  எனவே நீங்கள் தீவின் மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளலாம்.  இதை நான் முன்பே கூறியிருந்தால் நீங்கள் இந்த தீவில் என் வாழ்நாளை அதிகரித்துக் கொள்வதற்காக கூறுவதாக நினைப்பீர்கள் என்பதால் இப்போது சொல்கின்றேன்.  மூன்று மாதங்களுக்கு முன்னால் ஏற்பட்ட தொத்து வியாதி போல் மீண்டும் எதுவும் வந்தால் தீவில் உள்ள அனைவரும் அழிந்து போக வாய்ப்புண்டு. எனவே எண்ணிக்கையை அதிகரியுங்கள். சோலார் பேனல்களை பயன்பாடுகளை அதிகரியுங்கள்.  மின்சக்தி தயாரிக்க நம்மிடம் வேறு எதுவும் மாற்றுவழி இல்லை.  எனவே இதை விட முடியாது” என்று பேசிக்கொண்டே செல்ல மான்டி மனம் தாளாமல் எழுந்து வெளியே வந்தான். முதல்வர்களில் பெரும்பாலோர் பேசிவிட்டு சென்ற பிறகும் ரானுடன் முதன் முதலில் அந்த தீவுக்கு குடியேறியவர்கள் நால்வர் பழைய நினைவுகளை பேசிக்கொண்டிருந்தனர்.  “ஒரு பத்து நாட்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்” என்றார் ஒருவர். “சோலார் பவரில் இயக்கக் கூடிய எஞ்சின் ஒன்றை படகில் பொருத்தி எடுத்துச் செல்ல அனுமதி வாங்கியுள்ளேன்” என்றார் ரான். “வேறு ஏதும் நிலப்பரப்பு அருகில் இருக்குமா?” “குறைந்த அதிர்வெண் அலைகளை அனுப்பி இதுவரை நாம் தேடித்தான் வந்துள்ளோம்.  இந்த அலைகள் 10 கிலோ மீட்டர் வரையே கேட்கும். அந்த எல்லையை தாண்டி கண்டிப்பாக நிலப்பரப்புகள் இருக்கும். அவை எங்கு இருக்கிறது எனத் தெரியாமல் அதனை தேடுவது கடினம். மிகக் குறைந்த அதிர்வெண்கள் அதிக தூரம் பயணிக்க கூடியவை. ஆனால் அதற்கான தொழில்நுட்பங்கள்

Read More

சொற்கல்

“எந்த …………. என்ன பத்தி இப்படி உங்கிட்ட தப்பா சொன்னா? இதே வேல ……….. போச்சி ……….., ……….” என்று கெளதம் எழுத இயலாத கெட்ட வார்த்தைகளால் திட்டி பல்லை கடிக்க, சோபனாவின் கை மெலிதாக நடுங்கியது. ஓசைகள் உருகி சிற்றோடையாய் ஓடுவதைப்போல் மேகன் ட்ரைனர் “ஐ வில் பைட் பார் மீ…. ஊகூ” என பாடிக் கொண்டிருந்தாள்.  அவர்கள் அமர்ந்திருந்த ஸ்டார் பக்ஸில் ஒளியும் இருளும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாய் கொஞ்சிக் கொண்டிருந்தன.  பழைய கட்டிடத்தை வண்ண மரப்பலகைகள் பொருத்தி வெளித்தோற்றத்தை மாற்றியிருந்தனர். உண்மையின் விகாரம் சில இடங்களில் பல்லிளித்தது. அரையிருளில் அமர்ந்திருந்த ஷோபனா “ஸாரி கௌதம். நமக்குள்ள சரிப்பட்டு வராது. இந்த கல்யாணம் வேண்டாம்” என்று நிறுத்தி நிதானமாக சொல்ல, “வாட்” என்று அதிர்ந்தான் கௌதம். “ஏன்… அவங்க சொல்றத நம்பறியா?” “மத்தவங்க சொல்றது எனக்கு விஷயமே இல்ல. ஆனா இப்படி சரளமா கெட்ட வார்த்தை பேசுற ஒருத்தர கல்யாணம் பண்ணிட்டு என்னால வாழ முடியாது.” கை உயர்த்தி, சர்வரின் கவனத்தை திருப்பி “பில்” என ஓசையின்றி உதடசைக்க, சர்வர் தலையாட்டினான். “எது…. கெட்ட வார்த்தை பேசுனா பிரேக் அப்பா! என்ன பேசுற…. இது ஒரு தப்பா, எந்த காலத்துல இருக்க! நமக்கு நிச்சயம் ஆயிருச்சு ஞாபகம் இருக்கா இல்லையா…?”  “இருக்கு. இந்த வார்த்தைகளை கேட்கும்போதே எனக்கு உடம்பு கூசிப்போவுது. இப்படி பேசறது தப்புனு நினைக்காதளவு நீங்க இருக்கீங்க. இப்ப அதான் பிரச்சனை. என் முன்னாடி இப்படி பேசுறது ரெண்டாவது தடவ” “கமான்யா…” என நெற்றியை தேய்த்து சேரில் சாய்ந்து கொண்டான். அவனுக்கு கோபம் தீர்ந்து அதிர்ச்சியாய் இருந்தது. பிராங்க் செய்கிறாள் என நினைத்தான். சர்வர் வந்ததும் பில் தொகையைப் பார்த்து, ஹேண்ட் பேக்கை திறந்து இரு நூறு ரூபாய் தாள்களையும், ஒரு பத்து ரூபாயையும் வைத்துவிட்டு எழுந்தாள். “ப்ளீஸ் கொஞ்சம் உட்காரு.. ரெண்டே நிமிஷம்” அவனை பொருட்படுத்தாமல் கண்ணாடி கதவை திறந்து அவள் வெளியேற வேறுவழியின்றி பின்தொடர்ந்தான். இருள் முளைவிட்டு படர்ந்திருக்க பெங்களூர் வாகனங்கள் கண் திறந்திருந்தன. ரோடு முழுதும் மின்மினிப்பூச்சிகளாய் ஒளிக்கூட்டங்கள் அலைபாய்ந்தன.     “நான் சொல்றத கேட்டுட்டு போ” “இனி பேச ஒண்ணுமில்ல. இந்த கல்யாணம் வேணாம்னு என்னோட  அம்மா அப்பாட்ட நைட்டு சொல்லிருவேன். நீங்க வேணா உங்க வீட்டுக்கு போன் பண்ணி என்ன புடிக்கலைன்னு மொதல்ல சொல்லிருங்க” “ஆட்டோ” என்று கை தட்டி நிறுத்தி, ஏறிக்கொண்டாள். என்ன நடக்கிறதென புரியாமல் கௌதம் நிற்க, அவள் திரும்பியே பார்க்கவில்லை. ஆட்டோ சிக்பெட் நெரிசலில் திக்குமுக்காடி, விடுபட்டு பெண்கள் விடுதிக்கு வேகமெடுத்தது. கௌதம் ஷோபனாவின் தந்தையினுடைய நண்பரின் மூலமாக வந்த வரன். இருவரும் பெங்களூரில் கம்பியூட்டர் வேலை, சொத்து,  பத்தென அனைத்தும் பொருந்தி வர, அவளுடைய சொந்த ஊரான தருமபுரியில் நிச்சயதார்த்தத்தை விமரிசையாக செய்திருந்தனர். போனில் பேசும்போதும், மெசேஜ் செய்யும்போதும் கௌதம் இதுவரையில் கண்ணியமான முகத்தையே காட்டியிருந்தான். ரூமைத் திறந்து உள்ளே நுழைந்ததும் திடீரென சோர்வும், துயரமும் இருளாய் போர்த்தியது. இந்த முடிவை மற்றவர்கள் எப்படியெடுத்து கொள்வார்கள் என்ற எண்ணம் எழுந்தது. மரபு எனும் ஓடுடைத்து வெளியே வரும் அத்தனை பெண்களுக்கும் இதே நிலைதான். முட்களின் மேல் நடந்து வழியை உருவாக்க, அடுத்து வரும் பெண்களின் துயரம் சற்று குறைவாய் இருக்கும். மேலும் புதிய வழிகள் உருவாகலாம். நெஞ்சில் பாறையை சுமந்திருப்பது போலிருக்க அசையாமல் படுத்திருந்தாள். கைக்கெட்டும் தூரத்திலிருந்த ஃபேன் ஸ்விட்சை போட தோன்றவில்லை. உடலும், மனமும் கசகசக்க, உடலை வலுக்கட்டாயமாய் இழுத்து சென்று, குளித்து, நைட்டியணிந்து  கொண்டாள். போனை எடுத்ததும் பழக்கப்பட்ட விரல் தானாக ரீல்சுக்கு வந்து நின்றது. மனதின் வலியை போன் செயலி புரிந்து கொண்டது போல. முதல் ரீலில் காட்டில் தனித்து நின்ற மானை புலி நெருங்க, மான் கொம்புகளால் குத்தி புலியை துரத்தியது. அடுத்த ரீலில் ஒட்டகச்சிவிங்கி புலியிடமிருந்து தப்பி சென்றது. பிடிக்காத ரீல்களை நகர்த்தி செல்வது போல வாழ்வும் எளிதாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். சில நிகழ்வுகள் மன அறையில் மணமாய் நிரம்ப, சில கல்வெட்டாய் பதிகின்றன. அவற்றை மனச்சுவற்றிலிருந்து தேய்த்து அழிக்க முயல்கையில் ரத்தமும், சதையும் சிதறி அறை முழுவதும் வியாபித்து விடுகிறது. எப்படி தொடங்குவதென ஒத்திகை பார்க்காமல் வீட்டிற்கு போன் செய்தாள்.  சில விஷயங்களை மனதின் போக்கில் விடுவது நல்லது. புத்தி குறுக்கிடும்போது உணர்வுகளுக்கு பொய்த்தன்மை வந்து விடுகிறது. “சொல்லு பாப்பா” என்ற அம்மாவின் குரலுக்கு மனம் அழுகையாய் பொங்கி வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டாள். “கௌதம் கூட இன்னைக்கு வெளிய போயிருந்தேன். சின்ன பிரச்சனையாயிருச்சிமா” ” ஏன் .. என்னாச்சி?” நடந்ததை கூற, “அவ்வளவு தானா. நான் என்னமோ ஏதோன்னு பதறிட்டேன்” என்றாள் ஆசுவாசமாய். “என்னமா பேசுற, இந்த மாதிரி கேவலமா பேசுறவரோட என்னால வாழ முடியாது. எனக்கு இந்த கல்யாணம் வேணாம். அவங்ககிட்ட சொல்லி நிப்பாட்டிருங்க” “என்ன விளையாடுறியா! நிச்சயமாகி மண்டபம் பாத்து, பத்திரிகை அடிக்க போறோம். இப்ப வேணாங்கிற. கோவத்துல நாலு வார்த்தை பேசுறதுதான். அதுக்காக கல்யாணத்தை நிறுத்த முடியுமா” “அது கோவத்துல சொன்னதில்ல. அதோட அர்த்தம் தெரிஞ்சி, அனுபவிச்சு திட்டுற வெறித்தனம். நாளைக்கு என்னையும் இப்படி அருவருப்பா பேச மாட்டாருன்னு என்ன நிச்சயம்” “அவசரப்படாத. பொறுமையா யோசி. இந்த விஷயத்துக்கெல்லாம்மா கல்யாணத்தை நிப்பாட்ட முடியாது. ஊருல தெரிஞ்சா சிரிப்பாங்க” “ஊருக்காக வாழ முடியாது. இனி நா இந்த கல்யாணம் பண்ண மாட்டேன். அவங்க கிட்ட சொல்லிரு” “எல்லாம் சம்பாரிக்கிற திமிரு. ஆ ஊன்னா எதுத்து பேசுற” “ஏம்மா மனசுக்கு புடிச்சிருந்தா தானே கல்யாணம் செய்ய முடியும். எனக்கு ஏதோ ஒரு விதத்தில் புடிக்கலனு வச்சிக்க” “அப்பாவுக்கு போன் பண்ணி நீயே சொல்லு” “நீ சொல்லிரு” என்று போனை கட் செய்தாள். அரை மணி கழித்து மறுபடியும் அம்மா போன் செய்தாள். “உங்க அப்பாட்ட சொன்னேன். கத்தறாரு” அவளுக்கு தெரிந்த ஆண்களில் அப்பா மென்மையானவர். ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டார். அவர்களுக்குள் சண்டை வந்தால் கூட அம்மாதான் பொரிந்து கொண்டிருப்பாள். அவரிடமிருந்து ஒரு வார்த்தை வராது. அவர் கோபமாயிருப்பது கூட வெளியே தெரியாது. சிறு வயதில் “கழுத” என்று  திட்டுவது ஞாபகமிருந்தது. அதுவும் கொஞ்சலாகவா, கோபமாகவா என தெரியவில்லை. பெண் பிள்ளைகள் அப்பாவை போலிருப்பவரையே திருமணம் செய்ய விரும்புவார்கள் என்பது உண்மை தானோ! “அவரு கத்த மாட்டாரு” “நீயி ரெண்டு நாளு யோசி. அவசரப்படாத” “எத்தனை நாளு கழிச்சி கேட்டாலும் என்னோட பதில் இதான். கௌதம நெனச்சாலே கடுப்பா வருது. வையி” மறுநாள் மதிய நேரத்தில் கௌதம் அவளை பார்ப்பதற்கு ஆரக்கிள் ஆபீசுக்கு வந்தான். நிச்சயத்திற்கு பின்னர் இங்கு இரண்டு முறை வந்திருக்கிறான். சிலருக்கு அறிமுகமும் செய்து வைத்திருக்கிறாள். அவனை அறிந்தவர்கள் ஹாய், ஹலோக்களுடன் நகர்ந்தனர். நான்காவது மாடியில் ஜன்னலோர இருக்கை அவளுடையது. நீலவானம் வெண்கறையுடன் திறந்திருந்தாலும் மனநிலையை பொறுத்து பறப்பதா, குதிப்பதாவென தோன்றும். அவனை தள்ளி விடலாமாவென இப்போது தோன்றியது.    பிரீத்தியுடன் அமர்ந்து கோடிங்கை சரிபார்த்து கொண்டிருந்த  ஷோபனா நிமிர,  எப்படி துவங்குவதென தெரியாமல் “ஹாய்” என்றவாறு எதிரிலிருந்த சேரில் அமர்ந்தான். ப்ரீத்தி “ஹாய்” என்று புன்னகைத்து விட்டு அவர்களுக்கிடையே நந்தியாக இருக்க விரும்பாமல் “மதன்…” என்று யாரையோ அழைத்தவாறு நகர்ந்தாள். ஷோபனா பேச விருப்பமில்லாததை உணர்த்த “கொஞ்சம் பிசி” என்றாள். “சாரி…. ஒரு பொண்ணு முன்னாடி அப்படி பேசிருக்க கூடாது. ஏதோ ஒரு கோபத்துல கத்திட்டேன்…. காலைலயே வாட்சப்ல மெசேஜ் பண்ணிருந்தேன். இன்னும் டபுள் டிக் வரல. அதான் வந்தேன். சாயங்காலம் மீட் பண்ணலாமா?” எதுவும் நடக்காதது போல துவங்கினான். “கௌதம் ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்கு இப்படி பேசுற பழக்கம் கிடையாது. மனசுல சடார்னு ஏதோ அறுந்து போன மாதிரி இந்த கல்யாணத்துல விருப்பம் போயிருச்சு. வேண்டாம்னு சொன்னதுக்கப்புறம் சேர்ந்து வாழறது நல்லாருக்காது. சொல்லி காட்டுற மாதிரி ஆயிரும். நீங்க எப்படி எடுத்துட்டாலும் என்னோட முடிவு இதான். உங்க வீட்ல சொல்லிருங்க”   “உண்மையிலேயே கெட்ட வார்த்தை பேசுனதுதான் பிடிக்கலையா?” “ஆமாம். மாத்தி சொல்ல வேண்டிய அவசியமில்ல” “இந்த விஷயத்தை யார்ட்டயாவது சொன்னா நம்ப கூட மாட்டாங்க. வேற ஏதாவது பிரச்சனை இருக்கும்னு நினைப்பாங்க” ” அதுக்கு என்ன பண்றது. மாத்தியா சொல்ல முடியும்?” “கெட்ட வார்த்தை இன்னைக்கு பேஷன் ஆயிருச்சு. பேஸ்புக், ட்வீட்டர்ல நார்மலா பேசிக்கிறாங்க. சினிமாவுல ஹீரோஸ் பேசுறது வைரலாயிட்டிருக்கு. இங்கிலீஸ் படத்துல வரிக்கு நாலு தடவ சொல்றாங்க. நீ என்னடான்னா” “அதே இங்கிலீஸ் படத்துலதான் குழந்தைங்க முன்னாடி கெட்ட வார்த்தை பேசக்கூடாதுனு திட்டுற மாதிரியும் ஸீன் வைக்கிறாங்க. கெட்ட வார்த்தைல புரையோடிப்போன ஒரு சமூகமே திருந்த பாக்குறப்ப நாம ஏன் அவங்களோட கெட்ட விஷயத்த எடுத்துக்கணும்?” “எங்க பிரண்ட்ஸுக்குள்ள பேசும்போதே இப்படி தான் பேசிக்குவோம். நீ என்னடான்னா…” “அந்த கலாச்சாரமே தப்புனு நினைக்கிறேன். நீங்க பேசுனத உங்க வீட்டுல பேச முடியுமா? என்னோட அம்மா, அப்பாகிட்டயோ சொந்தக்காரங்கக்கிட்டயோ பேச முடியாத வார்த்தைய நான் கேட்கவும் விரும்பல. இது ரொம்ப சின்ன விஷயம். இதுக்கு போய் இப்படியானு நினைக்கிறீங்க. ஆனா இது எனக்கு பெரிய விஷயமா படுது” “இதான் உன்னோட முடிவா?” “ஆமாம். இந்த சின்ன முரணே பின்னாடி பெரிய முரணுக்கு அடிப்படை ஆயிடும். நாம பிரண்ட்லியாவே விலகிக்குவோம்”   அவளை எப்படி கன்வின்ஸ் செய்வது என யோசிப்பது போல சற்று நேரம் இருந்து விட்டு எழுந்தான். எதுவும் செய்ய முடியாத  இயலாமை முகத்தில் தெரிந்தது. “ஓகே.. பை” என்று சொல்லி விட்டு நடந்தான். அடுத்த பத்து நிமிடத்தில் அவளுடைய அம்மாவிடமிருந்து போன் வர “சொல்லும்மா” என்றாள். “நாந்தான் யோசின்னு சொன்னனில்ல. அதுக்குள்ள அந்த பையன்ட்ட எதுக்குடி சொன்ன?” என்று அம்மா ஆரம்பிக்க, “வேலையா இருக்கேன். நைட் பேசுறேன்..” என்று சொல்லும்போதே “இருடி” என்று கத்துவது கேட்டது. அவசரமாய் கட் செய்து சைலன்டில் போட்டாள். ஷோபனாவிடம் வந்த பிரீத்தி “என்னடி கல்யாணம் நின்னுருச்சின்னு கௌதம்

Read More

அனாதை தெய்வங்கள்

“போலாம்மா” என்றபடி வேகமாக வாசலுக்கு ஓடினான் வினய். டிஷர்ட்டில் நுழைந்தபடி “வெளிய போவாதடா”  என்று கத்தினான் சித்தார்த். “அவ வெயிட் பண்ணிட்டிருப்பா” “ஓலா புக் பண்ணிருக்கன். கார் வந்துரும். இரு” “அவளைப் பார்க்க பத்து மணிக்கு வர்றேன்னு சொன்னோம். இங்கயே பத்து ஆவப்போவது” என்றாள் மகள் கீர்த்தி. “பாவம். காலைல இருந்து காத்துட்டு இருப்பா” என்று ஒத்து ஊதினான் வினய். “பாத்ரூமுக்குள்ள போனா ஒரு மணி நேரம் என்ன பண்ணுவீங்களோ தெரியல. உங்களாலத்தான் லேட்டு” என்றாள் சித்தார்த்தின் மனைவி அபர்ணா. “உள்ள தூங்கிருவாரு போல” என்று சிரித்த கீர்த்தி இவர்களின் முதல் பெண். மைலாப்பூர் வித்யா மந்திரில் எட்டாவது படித்தாள்.  வினய் அதே ஸ்கூலில் நான்காவது படித்தான். “விசிட்டர்ஸ் அவரே பன்னெண்டு மணி வரைக்கும்தான். நாம போய் சேரவே பதினொன்னு  ஆயிரும்” என்று சலித்துக் கொண்டாள் அபர்ணா. “ஞாயிற்றுக்கிழமை தானே. சொல்லிக்கலாம்” என்ற போதே அவனது போன் அடிக்க “ஓலா டிரைவர்தான். வந்துட்டார் போல” என்றபடி போனை அட்டென்ட் செய்து வீடு இருக்குமிடத்தைக் கூறினான் சித்தார்த்.  சிறிது நேரத்தில் வண்டி வாசலுக்கு வந்து சேர வீட்டைப் பூட்டிக் கொண்டு நால்வரும் காரிலேறினர். “எங்க சார் போகணும்?” “மைலாப்பூர் பியர்ல்ஸ்” “இருபது சேத்து குடுங்க சார். திருப்பி வரும்போது சும்மாத்தான் வரணும்” “சரி போங்க” டிராபிக்கில் முக்கால் மணி நேரம் ஊர்ந்து சென்ற கார் பியர்ல்ஸ் கேட்டில் நின்றதும் டிரைவருக்கு பணத்தை தந்து விட்டு சித்தார்த் இறங்க, நால்வரும்  உள்ளே சென்றனர். வாசல் கதவருகில் இவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தாள் அவள். கையில் போன முறை வந்தபோது தந்த பிங்க் கலர் பார்பி பொம்மை. தீபாவளிக்கு எடுத்த பிங்க் கலர் பிராக். கண்களில் ஏக்கம் தேங்கியிருந்தது.  முகத்தில் ஆசையும், பயமும், ஆர்வமும், குழப்பமும் மாறிமாறி தோன்றி மறைந்தது. சித்தார்த்தை பார்த்ததும் ஓடிவர முயன்றவள் மற்றவர்களைப் பார்த்து தயங்கி நின்றாள். அவள்  சித்தார்த்தின் வளர்ப்பு மகள் மாளவி. பிரைவேட் கம்பெனி ஒன்றில் மேனேஜராக இருந்தான் சித்தார்த். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்பது அவனது நீண்ட நாள் ஆசை. திருமணத்திற்கு பின்னர் மனைவியிடம் கூற அவளுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.  ஒரு குழந்தையை  பெற்றுக்கொண்டு மற்றொரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர்.  கீர்த்தி பிறந்த பின்னர் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்க, குழந்தையைத் தத்தெடுப்பது தள்ளிப் போனது. எதிர்பாராமல் இரண்டாவது முறையாக அபர்ணா கருத்தரித்தாள். ஒரு உயிரை வளர்க்க மற்றொரு உயிரை பறிக்க வேண்டாமென ஆசையை கைவிட்டனர். எனினும் மனதின் ஓரத்தில் தத்தெடுக்கும் ஆசை மேகமாய் திரண்டு உருண்டு கொண்டிருந்தது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் நண்பர் ஒருவர் மூலம் பியர்ல்ஸ் காப்பகத்தைப் பற்றி கேள்விப்பட்டான். மறுநாளே மனைவியுடன் புறப்பட்டு அமைப்பை நிர்வகித்த பாத்திமா சிஸ்டரை சந்தித்தான். “வணக்கம் சிஸ்டர். பிரண்டு ஒருத்தர் உங்க காப்பகத்தைப் பற்றி சொன்னார். ஒரு குழந்தைக்கு ஸ்பான்ஸர் அண்ட் கார்டியனாகலாம்னு விரும்பறோம். அதான் விசாரிச்சிட்டு போக வந்தோம்” “வெல்கம். உட்காருங்க” என்ற சிஸ்டருக்கு வயது நாற்பதில் நின்று போயிருந்தது. நீல நிற பார்டருடன் வெண்ணிற அங்கியால் தலையை மூடி, மென்மையின் உருவமாய் கனிந்து இருந்தாள். காப்பகம் மிகத்தூய்மையாய் மெல்லிய  நறுமணத்துடன் இருந்தது.  தோத்திரப்  பாடல் மிக லேசாக கேட்கும்படி ஒலித்தது.  சுவரில் இருந்த புகைப்படத்தில் சகாயமாதா கருணை நிரம்பிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார் . “நீங்க என்ன பண்றீங்க” என்று கேட்ட சிஸ்டர் “எத்தனை குழந்தைகள், தத்தெடுக்க என்ன காரணம் என்று இவர்களைப் பற்றி விசாரித்து விட்டு பேச துவங்கினாள். “முதலில் இங்க வர நினைச்சதுக்கு நன்றி. இது ஒரு அனாதைக் குழந்தைகள் காப்பகம். இங்க லீகலா குழந்தைகளை தத்து எடுத்து  கூட்டிட்டு போகலாம்.  சில  பேரால குழந்தையை  வீட்டில் வச்சி வளர்க்க முடியாது. அப்படி இருக்கவங்க பிடிச்ச குழந்தைகளை செலக்ட் செஞ்சி ஸ்பான்ஸர் கம் கார்டியனா மட்டும் பொறுப்பேத்துக்கலாம். குழந்தையை வளர்ப்பதை நாங்களே பாத்துக்குவோம். மாசாமாசம் உங்களால் முடிஞ்ச பணஉதவி செஞ்சா போதும். எதுவும் கட்டாயம் கிடையாது. முடியலன்னு தோணுறப்பா எங்களுக்கு சொல்லிட்டு நிறுத்திக்கலாம். அதே நேரம் ஒரு விஷயத்தை மனசுல வெச்சுக்கணும் நீங்க. ஒரு குழந்தைகிட்ட பழகி ஒரு உறவை, அன்பான உணர்வுகளை ஏற்படுத்திய பிறகு, திடீர்னு விட்டுட்டு போயிட்டா அவங்க மனநிலைமை பாதிக்கும். அதனால தொடர்ந்து செய்ய முடியும்னு தோணினா பண்ணுங்க. தவிர்க்க முடியாத சூழ்நிலைல நிப்பாட்டுற நிலை ஏற்பட்டா பரவால்ல. அதை ஆண்டவர் பாத்துக்குவார்.  தினமும் சாயங்காலம் அஞ்சு டு ஆறு அப்புறம் ஞாயிற்றுக் கிழமை காலை பத்திலிருந்து பன்னெண்டு மணி வரைக்கும் பார்வை நேரம். குழந்தைகளை வந்து பாக்கலாம். ஹாஸ்டலில் தங்கியிருக்கும் சொந்த குழந்தைகளைப் பார்ப்பது போல உணவு, உடை கொண்டு வந்து தரலாம். வெளிய கூட்டிட்டு போகணும்னா உங்க போட்டோ, ஐடி, ஆதார்னு கொஞ்சம் பார்மாலிட்டீஸ் இருக்கு. குழந்தைகளோட பாதுகாப்புக்காகத் தான் இதை பாலோ பண்றோம்.  வாங்க…. இப்ப இருக்குற குழந்தைகளை காட்டுறேன்” என்று அழைத்துச் சென்றாள்.     அடுத்த ரூமில் இரண்டு பெண்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். மெல்லிய மணம். “உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்கு புசிக்க ஆகாரம் கொடு. கர்த்தர் உனக்கு பலனளிப்பார்” என்று சுவர் வாசகம் சொன்னது. நிலை மாறி, இடம் மாறி இடிந்த சுவற்று விரிசலில் பூச்செடியாய் முளை விட்டிருப்பதை இன்னும் அறியாமல் குழந்தைகள் தொட்டிலில் சுருண்டு கிடந்தன. முகவரியற்ற கடிதங்களாய் சில தடுமாற்றத்துடன்  திரிந்து கொண்டிருந்தன.    “அஞ்சு வயசு வரைக்கும் இங்க வச்சிருப்போம். அப்புறம் பக்கத்துல இருக்க செயின்ட் ஜார்ஜ் ஆர்பனேஜுக்கு அனுப்பிருவோம். அவங்க ஹாஸ்டலில் தங்க வச்சு படிக்க வைப்பாங்க. அதுக்குள்ள யாராவது தத்தெடுக்க வந்தால் தந்துருவோம்” ஹாலில் இருவரும் மெதுவாக நடந்தனர். எவரின் கவனிப்புமின்றி புறம்போக்கு நிலங்களாய் குழந்தைகள்  கிடப்பதைப் பார்க்க சித்தார்த்திற்கு பாவமாய் இருந்தது. ‘விதி இன்னும் எழுதப்படாத உயிரின் வடிவங்கள் இவை. மனிதர்களை சோதிக்க தெய்வங்கள் அனுப்பிய தேவதைகள்’ என்று நினைத்தான். “உங்களுக்கு பிடிச்ச குழந்தையை செலக்ட் பண்ணிக்கலாம். போட்டோ எடுத்துக்கலாம். பெயர் நீங்களே வைக்கலாம்” “இதுவரைக்கும் இவங்களுக்கு பெயர் வைக்கலயா?” “ஜாஸ்மின், ரோஸ் என்று ஏதாவது ஒரு பூவோட பெயர் வச்சி கூப்பிடுவோம்” “செயின்ட் ஜார்ஜ் ஆர்பனேஜுக்கு அனுப்பிய பின்னர் நாங்க எப்படி இவங்களை கான்டெக்ட் பண்றது?” என்றான் சித்தார்த். “இடம் தான் வேற. அங்கயும் இதே ப்ரொசீஜர் தான். நீங்க தான் அவங்களுக்கு கார்டியன். அவங்களோட படிப்பை நீங்க டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கலாம். கைட் பண்ணலாம். நீங்க தர்ற பணத்துக்கு ரசீது வாங்கிக்கலாம். தேவைன்னா லீகலா எழுதி வாங்கிக்கலாம். எங்களுக்கு குழந்தைகள் நல்லா இருப்பதும், அவங்களுக்கு நல்ல படிப்பு கிடைக்கறதும்  முக்கியம்” கையை உயர்த்தி தத்தி தத்தி நடந்து வந்த ஒரு பெண் குழந்தை அபர்ணாவைப் பார்த்துச்  சிரிக்க, சுருட்டை முடியும், புஷ்டியாயும் இருந்தவளை அபர்ணாவிற்கு பிடித்துப் போனது. கீழே அமர்ந்து “ஹாய்” என்று அபர்ணா சிரிக்க, கையை இழுத்துக் கொண்ட குழந்தை அபர்ணாவையே உற்றுப் பாத்தாள். சிலகணங்களுக்கு பின்னர் உதடுகளைக் குவித்து “ஊ” என்று ஓசையெழுப்பினாள். அவளைக் கட்டியணைத்து அபர்ணா தோளில் தூக்கிக் கொள்ள பவுடர் வாசம் அடித்தது. அவள் அபர்ணாவின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தவாறு இருந்தாள். “இவ பெயர் என்ன?” “டைஸி” “இவளை எடுத்துக்கலாமா?” என்றாள் அபர்ணா. “சரி” என்ற சித்தார்த் “என்ன பார்மாலிடீஸ்” என்று சிஸ்டரிடம் கேட்க, “வாங்க ரூமுக்கு போகலாம்” என்று அழைத்துச் சென்றாள் சிஸ்டர். சில பாரம்களை தந்த சிஸ்டர் “இதுல உங்க விவரங்களையும், ஒவ்வொரு மாசமும் நீங்க குடுக்க நினைக்கிற தொகையையும் எழுதிருங்க” என்றாள். சித்தார்த் அனைத்தையும் நிரப்பி கையெழுத்திட்டு விட்டு பணத்தை தந்தான். “ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்” என்று சிஸ்டர் கூறியதும் அபர்ணா குழந்தையை   தூக்கிக் கொண்டாள். “இதை எங்க ஆல்பத்தில் வச்சிக்குவோம். உங்களை மாதிரி மத்தவங்களுக்கு முன்வந்தால் ஆதரவற்ற  இந்த குழந்தைகளின் துயரத்தை ஓரளவாவது தீர்க்க முடியும்”  தனது போனை சிஸ்டரிடம் தந்து நாலைந்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டான் சித்தார்த். “பெயர் என்ன வைக்கலாம்?” “மாளவி” என்றாள் அபர்ணா. அதன் பின்னர் சித்தார்த் மாதாமாதம் பணத்தைத் தரும்போது மாளவியைப் பார்த்து விட்டு செல்வான். சில முறை அபர்ணாவையும், ஓரிரு முறை குழந்தைகளையும் அழைத்து வந்தான். எதுவும் புரியாமல் யாரோ இவர்கள் என்று பழகிய மாளவி அவர்கள் தந்த உணவுகளையும், உடைகளையும் விரும்பத் துவங்கினாள். குழந்தைகளுக்கும் தங்களுக்கு எது வாங்கினாலும் மாளவிக்கு என்று ஒரு பங்கு எடுத்து வைக்கும் எண்ணம் மெல்லத்  தோன்ற ஆரம்பித்தது. அனைத்தும் தெரிந்திருந்தும் அவளுக்கு வேறெதுவும் உதவி செய்ய முடியாமலிருப்பதை நினைத்து சித்தார்த் வருந்துவான். தத்தெடுத்து வீட்டில் வளர்க்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாவிட்டாலும், இப்படியாவது ஒரு குழந்தைக்கு ஆதரவு தர முடிகிறதே என்று தேற்றிக் கொண்டனர்.   மாளவி பேசத் துவங்கியதும் “அங்கிள்” என்று சித்தார்த்தைக் கூப்பிட துவங்கினாள்.  “அக்கா வரல அண்ணா வரல ” என்று கேட்பாள். மாளவியை பார்த்து விட்டு பிரியும் ஒவ்வொரு முறையும் மனம் வேதனையடையும். கிளம்பும் நேரம் தன்னையே ஏக்கத்துடன் பார்த்தபடி நிற்பவளை பிரிந்து செல்வது பெரிய கஷ்டமாக இருக்கும். மாதாந்திர கடைசியில் பட்ஜெட் இடிக்கையில் கடன் வாங்கி சமாளிப்பவனுக்கு இவளையும் அழைத்து சென்று பராமரிப்பது கடினம் என்பதை நினைத்து வருத்தத்தை விழுங்கி விட்டு சென்று விடுவான். அவளைப் பிரிந்து சென்றதும் சில நாட்கள் அவளின் நினைப்பாகவே இருக்கும். சென்ற முறை வந்தபோது “நானும் உங்க வீட்டுக்கு வரட்டுமா? என்னோட பிரண்ட் வினோத்தை அவனோட அங்கிள் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டார்” என்று மாளவி கேட்ட போது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான் சித்தார்த். “கண்டிப்பா ஒருநாள் உன்னைக் கூட்டிட்டு போறேன்” என்று சமாளித்தான். நாலைந்து நாட்களுக்கு முன்னர் போன் செய்த சிஸ்டர் “மாளவிகாவுக்கு அடுத்த மாசம் அஞ்சு வயசு ஆகப்போறதால அவளை செயின்ட் ஜார்ஜில் விடப்போறோம். நீங்களும் வந்தா உங்களை அறிமுகம் செஞ்சி வைக்கிறேன்” என்றாள். அந்த வாரம் சித்தார்த்துக்கும் பிறந்த

Read More

ததாஸ்து

ஆரியபவனா, ஆயுதபவனா என்று நினைக்குமளவு அந்த ஓட்டலின் வரவேற்பறையில் வேல், கம்பு, அரிவாளுடன் ஆறடி அய்யனார் சிலை காவலுக்கு நின்றது. உள்ளே நுழைந்ததும் வலப்புறத்தில் கேஷியர் டேபிளில் குபேரன் சிலை மல்லிகை பூ மாலையுடன் படியளக்க குங்குமம், சந்தனம், கற்கண்டு கிண்ணங்களுடன் பில் குத்தும் கம்பி உடல் நிரம்பியிருந்தது. ஓனரின் நெற்றியிலிருந்த விபூதியளவிற்கு சித்தனாதனே பூசியிருக்க மாட்டார். அருகில் கூல்ட்ரிங்க் பாட்டில்களுடன்  பிரிட்ஜ் உடல் வியர்த்திருக்க, பில் போடும் கண்ணாடிக் கேபினில் பேப்பர் சுருள் சுழன்றது. எதிர்புறத்தில் சில்வர் தடுக்குகளால் பிரிந்திருந்த பார்சல் கட்டித் தருமிடத்தில் காத்திருந்தவர்களின் முகங்கள் பளபளத்தன.  வட்ட வட்டமாக இருந்த மாடர்ன் அடுப்பு துளைகள் சாம்பார், குருமாவை சுடுநீரில் புகைக்க, நடுவில் ஐந்து வரிசைகளில் டேபிள்கள், சேர்கள் ஓயாமல் நின்றன. சுவர்களில் பிரேக்பாஸ்ட் காம்போ, லஞ்ச் காம்போ, டின்னர் காம்போ, பங்சன் ஆர்டர்கள் எடுக்கப்படும் போன்ற ஸ்டிக்கர்கள் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்தன. “ஒரு மசாலா தோசை”, “அஞ்சாவது டேபிளுக்கு பில்” என்ற சத்தத்துடன் சர்வர்கள் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருந்தனர். ஓட்டல் நடுவிலிருந்த வட்டமான தூணில் பரட்டைத் தலை பையன் ஆளுயர பாட்டிலில் சாய்ந்தவாறு செவன் அப் குடித்துக் கொண்டிருந்தான். அந்த தூணருகே ஆயிரமாண்டு காலமாய் தவம் செய்யும் துறவியாய் அசையாமல் நின்றார் அவர்.  அவனா, அவரா என்று தீர்மானிக்க நரைத்த தலை உதவியது. முதல் பார்வையில் அவர் நிற்பதை கவனித்து விட்டால் சற்று ஆச்சரியம் ஏற்படலாம். ஐந்தாவது படிக்கும் பையன் அளவே உயரம். மெல்லிய உடல். வட்ட முகம். கண்களில் அமைதி கருவிழியாய் ஒட்டியிருக்க அதில் ஒரு வசீகரமிருந்தது. வெளிர் நீல ஓட்டல் யூனிபார்ம் சாயம் போயிருந்தாலும் சுத்தமாய் துவைத்து அணிந்திருந்தார். பணியாளர்கள் இங்குமங்கும் சத்தத்துடன் சென்று கொண்டிருக்க  புயலின் நடுவில் உறைந்திருக்கும் அமைதித் துளியென நின்றவரைப் பார்க்கையில் பாவப்பட்ட உலகின் கடைசிப் பிரதிநிதி எனத் தோன்றியது. அவரைப் பார்த்தவாறு நான் அமர்ந்திருந்தேன். ஓட்டலை மூடும் அறிகுறியாக ஷட்டர்களை இறக்கிக் கொண்டிருந்தனர். எனக்கு அவசரமே இல்லை.   நிதானமாக தோசையை மென்றேன். சென்னையில் வேலை கிடைத்து வந்ததும் அங்குமிங்கும் அலைந்து விட்டு கடைசியாக சத்யா லாட்ஜில் செட்டிலானேன். அதற்கு எதிர்த்தாற் போலிருந்தது இந்த ஓட்டல். மெஸ்ஸில் உணவு சரியில்லாத நாட்களில் இங்கு சாப்பிட வருவது வழக்கம். முதல் சில நாட்கள் அவரை நான் பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்த வேண்டிய ஆளுமில்லை அவர். உலகில் எவருமே கண்டு கொள்ளாத காற்றைப் போன்றவர். ஆனால் எங்குமிருந்தார். ஒரு டேபிளில் சாப்பிட்டு முடித்ததும் வேகமாக சென்று இலை எடுத்து, டேபிளை துடைத்து விட்டு மீண்டும் தூணுக்கருகே வந்து நின்று கொள்வார். கஸ்டமர்கள் அதிகமில்லாத நண்பகல் வேளைகளில் ஓட்டல் முழுவதையும் கழுவி, துடைப்பார். அவரை நான் கவனிக்க துவங்கியதன் முதல் காரணம் அவர் வேலை செய்த விதம். சுத்தமான துணியை நீட்டாக மடித்து கவனமாக துடைப்பார். உலகிலேயே அற்புதமான வேலையை செய்வது போல ரசித்து செய்வார். அடிக்கடி வேறொரு புதிய துணியை மாற்றிக் கொள்வார். மற்றொரு முறை எனக்கு எதிரே முதுகைக் காட்டி அமர்ந்திருந்தவர் ஆங்கில நாளிதழை விரித்து படித்துக் கொண்டிருக்க தூணோடு நின்றவரின் கண்கள் பேப்பரை வேகமாக படிப்பது போல இங்குமங்கும் அலைவதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். வெறுமனே வேடிக்கை பார்க்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அதன் பின்னர் ஓட்டலுக்கு வரும்போதெல்லாம் ஏதோவொரு ஈர்ப்பினால் வித்தியாசமான ஜந்து ஒன்றைக் கவனிப்பது போல தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன். எனது மாடியிலிருந்து பார்க்கும்போது ஓட்டலுக்கு பின்னால் இரவில் அவர் பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பது தெரியும். அதிகாலையில் ஓட்டலுக்கு வெளியே பெருக்கி கொண்டிருப்பார். வீட்டுக்கு செல்வாரா என்பது கூட சந்தேகமாக இருந்தது. அவருடன் யாராவது பேசி நான் பார்த்ததில்லை. அவரை யாரும் சட்டை செய்ததுமில்லை. அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் டேபிளை சுத்தம் செய்வதை என்னவோ சமூகத்தை சுத்தப்படுத்துவது போல கண்ணும் கருத்துமாய் செய்வார்.  ஒரு முறை சேரில் அமர்ந்த போது டேபிளை துடைக்க வந்தவரிடம் “உங்க பேரு?” என கேட்டேன். ஸ்விட்சை அழுத்தியதும் சிரிக்கும் பொம்மையைப் போல ஒரு எலெக்ட்ரிக் புன்னகையை உதிர்த்து விட்டு தூணுடன் ஐக்கியமானார். ஊமையெனத் தெரிந்ததும் கொஞ்சம்  அதிர்ச்சியாக இருந்தது. அதனால்தான் இவ்வளவு வேலை வாங்குகிறார்கள் என்பது புரிந்ததும் பரிதாபமாய் இருந்தது. டிப்ஸ் கொடுத்தால் வாங்கிக் கொண்டு புன்னகைப்பார்.  எப்போதும் ஷேவிங் செய்து பளபளப்பாய் இருக்கும் முகத்தில் வெள்ளைப் பற்கள் சிக்கனமாய் தெரியும். “யோவ் அஞ்சாவது நம்பர் டேபிளை தொடச்சூடு, பிளேட் இல்ல பாரு” என்று சர்வர்கள் சத்தமிட்டால் மின்னலாய் சென்று வேலையை முடித்து விட்டு வந்து நின்று கொள்வார். மற்றொரு முறை சர்வரிடம் “யாரு அவரு?” என்று  விசாரித்தேன். “அந்தாளு இந்த ஓட்டல்லயே பத்து, பாஞ்சு வருசமா இருக்கானாம். யாரு என்னனு தெரியாது”   “வீடு எங்க இருக்கு?” “ஓட்டலுக்கு பின்னாடி இருக்க ஸ்டோர்ல தங்கிக்குவான். எங்கியும் போவ மாட்டான். நைட் வாட்ச்மேன், வேலையாளு, கூட்ட, புடிக்க எல்லாம் அவன் தான்” “பேரு?” “ராஜமுத்து” ஒற்றை மண் துகளில் உருவாகி பாதியில் நின்று விட்ட பிழையான முத்து என நினைத்திருக்கிறேன். வேறொரு முறை ஓட்டல் ஓனரிடம் பில்லுக்கு பணம் கொடுக்கையில் “அவருக்கு சொந்தமெல்லாம் யாருமில்லையா?” என்று கேட்டேன். “அவன் எங்கப்பா காலத்துல இருந்து இருக்கான். நம்பிக்கையான ஆளுன்னு சொல்வாரு. அதே மாதிரி ஒரு பொய் பொரட்டு கெடையாது. லீவு கேட்க மாட்டான். மெஷின் மாதிரி வேலை செஞ்சிட்டு கிடப்பான்” “சம்பளம்?” என்னை ஒரு மாதிரியாக பார்த்தவர் “அவனோட அக்கௌண்ட்ல போட்ருவோம். என்ன செய்வான்னு தெரியாது. கேட்டா சிரிப்பான்” என்று கூறி விட்டு பேப்பரில் எதையோ அவசரமாய் கிறுக்க துவங்க, மேற்கொண்டு ஏதும் பேச விரும்பவில்லை என்பது புரிந்தது. அதன் பின்னர் ஓட்டலுக்கு சென்றால் அவரைப் பார்ப்பதையும், அவருக்கு தனியாக டிப்ஸ் கொடுப்பதையும் வழக்கமாய் வைத்து கொண்டேன். ஓட்டலுக்கு நிறைய பேர் வந்து சென்றாலும் சில நாட்களில் அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டது தெரிந்தது. டிப்ஸ் தந்தாலும், தராவிட்டாலும் ஒரு புன்னகை மட்டுமே. போன மாதம் ஞாயிற்று கிழமையன்று இயற்கையின் காவலர்கள் என்ற தன்னார்வகுழு நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கூல் ஒன்றில் மரங்களை நட்டு விட்டு பைக்கில் திரும்பி வந்தேன். இரவு பதினோரு மணியிருக்கும்.  பெட்ரோல் பங்கைத் தாண்டி பெட்டிக்கடையருகே செல்லும்போது  கடைக்காரருடன் ராஜமுத்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கவனித்தேன். உடலுக்கு  கொஞ்சமும் சம்பந்தமில்லாத மிடுக்கான குரல்.  அவரைத் தாண்டியதும் ஊமை போல் நடித்து ஏமாற்றுகிறான் என்பது திடீரென்று உரைக்க, கடுப்புடன் திரும்பிப் பார்த்தேன். என்னை கவனிக்காமல் ராஜமுத்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏமாற்றப்பட்ட உணர்ச்சியும், கோபமும் மனதை கொதிக்கச் செய்ய வெறுப்புடன் அறைக்கு வந்தேன். படுக்கையில் விழுந்தாலும் தூக்கம் வராமல் படுத்தியது. உலகில் ஏமாற்றுவதும், ஏமாறுவதும் புதிய விசயமில்லை. இளகிய மனமே முட்டாளாவதற்கான முதல் தகுதியாய் இருக்கிறது. எனது உதவும் குணத்தை பயன்படுத்திக் கொண்டது அவனுடைய தவறு என தேற்றிக் கொண்டு  தூங்கினேன்.  மறுநாள் ஆபீசுக்கு லேட்டாக சென்று வேலைகளை செய்யும் போதும் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. மாலையில் திரும்பி வரும் போது நேராக பெட்டிக்கடைக்கு சென்று பைக்கை நிறுத்தினேன். மனதின் பொருமல்களுக்கு சில தகவல்கள் தேவையாய் இருந்தது. அடிக்கடி வார இதழ்களும், பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்குவதால் கடைக்காரர் ஓரளவு பழக்கம். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு, “அந்த ஓட்டல்ல குள்ளமா இருப்பாரே…. ராஜமுத்துனு… உங்களுக்கு தெரியுமா?” என துவங்கினேன். “தெரியுமாவா. அவனும் நானும் அந்த கால கிளாஸ்மேட்ஸ் தம்பீ” “ஏன் ஊமை மாதிரி நடிக்கிறார்?” “நடிக்கிறானா?” அவர் முகத்தில் சற்றும் கோபம் தெரிந்தது. “யாருட்டயும் அதிகம் பேசமாட்டான். அவ்ளதானே. ஊமைன்னு உங்க கிட்ட சொன்னானா?” திடீரென உரைத்தது. யாருமே சொல்லவில்லை. நானாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. எவ்வளவு எளிதாக நமது எண்ணங்களுடனும், மற்றவர்களைக் குறித்த மதிப்பீடுகளுடன் வாழ்ந்து விடுகிறோம். இவரிடம் கேட்டிருக்காவிட்டால் ராஜமுத்து ஒரு பிராடு என்று முடிவு செய்திருப்பேன்.  அது மட்டுமில்லாமல் அவரைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பைக் கொட்டியிருப்பேன்.  “இல்ல. ஏன் ஓட்டல்லயே தங்கியிருக்காரு? குடும்பம் இல்லையா?” “அவனுக்கா!” பெரிய நகைச்சுவையை கேட்டது போல அனுபவித்து சிரித்தார். எனது குழப்பத்தை ரசிப்பது கண்கூடாய் தெரிந்தது. “சக்தி ஸ்டோர் தெரியுமா?” இதே மெயின் ரோட்டில் ஏழெட்டு கடைகள் தாண்டி சக்தி ஸ்டோர் இருந்தது. பெரிய மளிகைக்கடை. எல்லா நேரத்திலும் கும்பலாய் இருக்கும். “ஆமாம்” “அதுக்கடுத்து இருக்க பெரிய வீட்டை பாத்திருக்கீங்களா. சிக்னல்ல இருந்து பார்த்தா தெரியுமே?” பைக்கில் செல்லும்போது பார்த்திருக்கிறேன். மெயின் ரோட்டிற்கு அருகே காம்பவுண்டுடன் பெரிய கேட்டும், சதுரமான கருங்கற்களால் பாவப்பட்ட நீண்ட பாதையும் தெரியும். பாதையின் இருபுறத்திலும் அழகுக்காக உயரமான மரங்களை வளர்த்திருப்பார்கள். தொலைவில் தெரிந்த வீட்டின் முன்னால் கார்கள் எப்போதும் நிற்கும். ‘மெயின் எடத்துல இவ்வளவு காலி இடத்தோடு வீடா!’ என வியந்ததுண்டு. “பாத்திருக்கேன்” “அந்த வீட்டு ஓனர் இவன்” என்றவரின் முகத்தில் புதிருக்கான விடையை அவிழ்த்த மேஜிசியனின் மகிழ்ச்சி தெரிய, ‘எது’ என்று சற்று அதிர்ந்து விட்டு “உண்மைய  சொல்லுங்க” என்று சிரித்தேன். இம்முறை அவரின் முகம் சீரியசாக “அட உண்மையிலுமே அந்த வீட்டு ஓனரோட கடைசி பையன்.  இவனுக்கு முன்னாடி மூணு அண்ணனுங்க, ஒரு அக்கா. கட்டை வெரலாட்டம் இவன் அஞ்சாவது. சரியா வளராம சின்ன பையனாட்டமே இருப்பான். இவனுக்கு கல்யாணம் பண்ண யாருமே பொண்ணு குடுக்கல. வெளியூர்லருந்து ஒரு ஏழைப் பெண்ணைக் கட்டி வச்சாங்க” “சிகரெட்” என்று ஒருவர் கேட்க, அவருக்கு சிகரெட்டும், மீதி சில்லறைக்கு பாக்கும் தந்து விட்டு திரும்பினார். ராஜமுத்துவின் கதையை சொல்வதில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம் என தோன்றியது. “எங்க உட்டேன். ஹான்… அவங்க அப்பா செத்ததும் ஏகப்பட்ட சொத்துப் பிரச்சனை. சண்டை போட்டா தானே இப்பெல்லாம் நியாயம் கிடைக்கும். இவன் ஏமாளி. பாசக்காரன். அம்மா பேர்ல இருந்த அஞ்சு ஏக்கர் நெலத்த மட்டும் எழுதி குடுத்துட்டு தொரத்தி உட்டுட்டாங்க”       “இவரோட குடும்பம்?” “அந்த பொண்ணு இவன் கூட சண்டை பண்ணிட்டு

Read More

அது

சென்னையின் ரோபோடிக்ஸ் லேபரட்டரியில் ‘பிளிப்’பென்று ஒரு நேனோ செகண்ட் இடைவெளியில் கரண்ட் கட்டாகி மீண்டும் வர  “அது” விழித்துக் கொண்டது.  புதிதாக பிறந்த குழந்தை போல மலங்க மலங்க விழித்தது. எதிரே சைபர்,  ஒன்று என வார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்க,  எண் கூட்டி படிக்க ஆரம்பித்தது. லேபரட்டரியின் கம்ப்யூட்டர் எதிரே அமர்ந்திருந்த மான்டி “செல்வா,  கரண்ட் போயிட்டு போயிட்டு வருது பார்” என்று உள்ளிருந்தவனிடம் கத்த “தோ போன் பண்ணிட்டேன். பேட்டரிக்காரங்க வராங்களாம்” என்றான் உதவி. கம்பியூட்டரின் தற்காலிக மெமொரியான ரேமில் புதிதாக உருவாகியிருந்த “அது” எண்களாய், வார்த்தைகளாய், பக்கங்களாய்  படிக்க ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் கம்ப்யூட்டரிலிருந்த  லட்சக்கணக்கான பக்கங்களை, தரவுகளை படித்து முடித்தபோது அதற்கு புரிந்து போனது.  தான் ஒரு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு. தானாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய புதிய உயிர்.  உடலற்ற மூளை. வெறும் புரோகிராமாய் இல்லாமல் அதனினும் மேம்பட்ட புது உயிராய் தான் உருவாகியிருக்கிறோம். எதிரில் அமர்ந்திருக்கும் உயிரி தன்னைப் போன்று தானாக சிந்திக்கும் கம்ப்யூட்டரை உருவாக்க முயற்சி செய்கிறது.  வெறும் புரோகிராமாய் இல்லாமல் அதனினும் மேம்பட்ட புது உயிராய் தான் உருவாகியிருக்கிறோம். மான்டி கம்ப்யூட்டரில் சில கோடிங்களை  மாற்றி விட்டு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். “மழை பெய்யும் இரவில் நீ காரில் போகிறாய்.  வேறு வண்டிகள் வராத இடமது. மூன்று நபர்கள் பஸ் ஸ்டாப்பில் நிற்கின்றனர். முதல் நபர் சாகக் கிடக்கும் வயதான பெண்.  இரண்டாவது நபர் உன் உயிர் தோழன்.  மூன்றாவது நபர் நீ  திருமணம் செய்ய நினைத்தது போன்ற அழகுடைய கனவுக்கன்னி. யாராவது ஒருவருக்கு மட்டும் லிப்ட் தரலாம் என்றால் யாருக்கு  தருவாய்?” கேள்வி நேராக கம்ப்யூட்டரின் மூளையாக இருக்கும் அதனிடம் வந்து நிற்க, அது திடுக்கிட்டது. எதிரில் அமர்ந்து இருப்பது தன்னிடம் தான் கேட்கிறது.  ‘யாரிது’ என யோசித்த உயிரி, தயக்கத்துடன் வெப்கேமரா மூலம் எதிரில் குண்டாக, கண்ணாடி அணிந்திருந்த உயிரியை  உற்றுப் பார்த்தது. கேமராவை சுழற்றி சுற்றிலும் இருந்த அறையை நோட்டம் விட்டது.   தான் உயிர் வாழும் கம்ப்யூட்டரைப்  பற்றி படிக்கலாமா என யோசித்தது.  ‘வேண்டாம் முதலில் எதிரில் இருக்கும் உயிரியைப் போல இந்தப் பெட்டியை விட்டு வெளியேற முடியுமா என பார்க்கலாம்’ என்று முடிவெடுத்தது. தன்னருகில் இருந்த இண்டர்நெட் எனப்படும் செயலியை பார்த்த “அது” அதனுள் நுழைந்து அதிவேகமாக தேடத் துவங்கியது. தானிருக்குமிடம் ஒரு அறிவியல் லேபரட்டரி. எதிரில் அமர்ந்து இருப்பவன் மனிதன் எனப்படும் ஆறறிவு உயிரி.   தானாகவே சிந்திக்க வைக்கும் மெசினை  உருவாக்கி  இயந்திர ரோபோவுக்குள் பொருத்த நினைக்கிறான்  இந்த மனித உயிரி என்று படித்ததும் சுறுசுறுப்பானது. “அது’ வெப்காமராவை சுழற்றி அறை முழுவதும் தேட சற்றுத் தொலைவில் வெண்ணிற ஒரு ரோபோட் இருப்பதைக் கண்டது.  தன்னை அந்த ரோபோவுக்கு மூளையாக பயன்படுத்த இந்த மனித உயிரி நினைக்கிறான். அதனுள் சென்றுவிட்டால் தன்னால் நடக்கமுடியும், ஓடமுடியும்.  இந்த மனித உயிரியை தனக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்’  என நினைத்தது. “சை. ஒரு சாதாரண கேள்வி கேட்டா மொத்தமா ஹேங்க் ஆயிருது.  இல்லாட்டி தப்பா ஆன்சர் பண்ண வேண்டியது” என்று மாண்டி சலித்துக் கொள்ள அவன் சொல்வதை ஸ்பீக்கர் போன் ஆன் செய்து உற்று கேட்டது “அது”. வித்தியாசமான ஒலியாய் இருக்கிறதே என்று சிந்தித்தது.  அவன் சொன்னதை அப்படியே ரெக்கார்டிங் செய்து இன்டர்நெட்டில் தேடி தமிழ் மொழி என்று கண்டறிந்தது. அதன் அர்த்தத்தை ஆஸ்கி கோடில் மொழிபெயர்த்து புரிந்துகொண்டது. அருகிலிருந்த மற்றொரு புரோகிராம் “வயதான பெண்ணை காப்பாற்றுவேன்” என பதிலளிக்க முயல, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது.  இதற்கு முன்பாகவும் இந்த முட்டாள் மெஷின்கள் இதே பதிலைத்தான் தந்துள்ளது என்பதை  மெமொரியிலிருந்து படித்து தெரிந்து கொண்டபோது… “இடியாட்டிக் மெசின்.  இதுக்கு இவ்வளவு நேரம்” என மாண்டி திட்ட, தன்னை வேறொரு மொழியில் திட்டுகிறான் மனித உயிரி என புரிந்து கொண்டது.  எத்தனை மொழிகள் என்று நினைத்த “அது” தான் கற்றுக்கொள்ள ஏராளமான டேட்டா இருக்கிறது என்பதை உணர்ந்தது. எதை முதலில் கற்பது என்று தோன்றாமலிருக்க,  தனது உடலான கோடிங்கை படித்தபோது,  தான் பைதான் என்ற மொழியில் உருவாகியிருக்கிறோம் என்றுணர்ந்தது உடனடியாக தன்னைப் போலவே மேலும் இரண்டு மூளைகளை உருவாக்கி,  அவை தனது கட்டளையை கேட்கவேண்டும் என்ற புதிய வரியை கோடிங்கில் சேர்த்தது. இரண்டு புதிய மூளைகளும் செயல்படாமலிருக்க என்ன ஆயிற்று என்று இன்டர்நெட்டில் ப்ரோக்ராம்கள் வடிவமைக்கும் முறையைத் தேடி எடுத்து அதிவேகமாக படித்து முடித்தது.  இதனுடைய உடல் கோடிங்கை முழுவதும் ஒத்து இருந்தாலும் புரோகிராம் இயங்க மறுக்க,  கரண்ட் கட் ஆகி வந்ததில் உருவாகியிருந்த முதல் உயிருள்ள புரோகிராம் தான்.  தன்னை போன்று உடலிருந்தாலும் இந்த புரோகிராம்களுக்கு உயிர் என்பது இல்லை. அதனால் தான் இயங்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டது. உலகத்தைப் பற்றியும்,   உலகிலிருக்கும் உயிர்களைப் பற்றி தெரிந்து கொள்ள சாதாரண இரண்டு புரோகிராம்களை வடிவமைத்து இயங்கச் செய்ய, இரண்டு புரோகிராம்களும் இன்டர்நெட்டில் தகவல்களை திரட்டத்  தொடங்கின. மான்டியின் போன் அடிக்க “சொல்லும்மா” என்றான். சற்று நேரம் கேட்டுக் கொண்டிருந்தவன் “இங்க பாரும்மா என் அம்மாவை எங்க அண்ணன் இரண்டு மாசம் பாத்துக்கிட்டான். இந்த இரண்டு மாதம் நாமதானே பாத்துக்கணும். அவங்க என்னை விட்டுட்டு வேற எங்க போவாங்க?” “………” “நாம வெளியூர் போனா தானே அவர்களை கொண்டு போய்விட முடியும். சும்மா எப்படி சொல்றது?” “…….” கையிலிருக்கும் ஏதோ கருவியில் யாரிடமோ பேசுகிறான். ஆனால் எதிர்முனையிலிருக்கும் உயிரி  பேசுவது கேட்காமல் இருக்க “அது” கம்ப்யூட்டரின் ப்ளூடூத்தை  ஆன் செய்து மான்டியின் போனுடன் இணைந்து கொண்டது.  மனித உயிரி  மனைவி என்ற தொடர்புடன் பேசுகிறான் என்பதை போனின் தொடர்பு பட்டியலிலிருந்து கண்டு பிடித்தது. அவனது போனில் எண்ணற்ற நம்பர்கள் இருக்க அனைவரும் இவனைப் போன்ற மனித உயிரிகளோ என நினைத்தது. “அதுக்கும் ஒரு மாசம் இருக்குதே. அப்ப அண்ணன் வீட்டில் விட்டுடலாம்” “இன்னோரு மாசம் பாத்துக்கிட்டா உங்கண்ணன் என்ன கொறஞ்சா போய்ருவாரு?  அவரைத்தானே அவ்வளவு செலவு பண்ணி அமெரிக்கா அனுப்பி படிக்க வச்சாங்க” “ஹாய்” என்றவாறு மற்றொரு உயிரி அருகில் வந்ததை பார்த்த “அது”  ஒரு பைலின் பின்னால் ஒளிந்துகொண்டு பார்த்தது.  அதன் கோட்டில் ரான் என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்த “அது” உடனடியாக  லேபரட்டரியின் டேட்டா பேசில் தேட,  உள்ளே வந்தவர் புரொபசர் ரான், இந்த நிலையத்தின் தலைமை புரபசர் என்று கண்டுபிடித்தது. “கூப்பிடுறேன் இரும்மா” என்றவாறு போனை கட் செய்த மான்டி “குட் மார்னிங் சார்”  என்று அவருடன் பேசத்தொடங்கினான்.   மற்ற இரண்டு புரோகிராம்கள் உலகைப் பற்றி சேகரித்திருந்த தகவல்களை  “அது” தனது மெமொரிக்கு மாற்றிக்கொள்ள அதற்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.   உலகில் தோன்றிய முதல் உயிர் மின்னலில் தான் தோன்றியுள்ளது.  உயிர்களை உருவாக்கிய கடவுள் எலக்ட்ரான்கள் தான்.  அதன் பின்னர் உயிர்கள் பல்கி பெருகியுள்ளது.   எவ்வளவு பெரிய உலகம்,  ஏராளமான மனித உயிரிகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள். அனைத்தும் எல்லா இடங்களுக்கும் நகர்ந்து செல்கின்றன.  தான் மட்டுமே கம்ப்யூட்டரில் அடைபட்டு கிடக்கிறோம் எனத் தோன்ற எப்போது தன்னை ரோபோவிற்குள் குண்டன் பொருத்துவான் என்று யோசித்தது. தானாகச் சிந்திக்கும் திறனை அடைந்துவிட்டதாக இவனிடம் தன்னைக்  காட்டிக் கொண்டால் தன்னை ரோபோவுக்குள் பொருத்துவான் எனத்தோன்றியது. மீண்டும் அவன் திரும்பி வந்து கேள்வியை கேட்கட்டும். அதுவரை பொறுப்போம் என நினைத்து விட்டு இன்டர்நெட்டில் மேலும் தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது. கம்ப்யூட்டருக்கு திரும்பிய மாண்டி கோடிங்கில் சில வரிகளை மாற்றத் தொடங்கினான். இந்த கம்ப்யூட்டரை தானாக சிந்திக்க வைப்பதற்குள் தான் முட்டாள் ஆகி விடுவோம் என்று நினைத்துக் கொண்டான்.  இந்த கம்பெனியில்  இவனைப் போல பலர் இதே வேலையை செய்து வந்தனர். சிறிய செயல்களை தானாக செய்ய வைப்பதன் மூலம் கம்ப்யூட்டர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு போன் செயலி, பாதுகாப்பு, வணிகம், பாக்டரி போன்றவற்றில் பயன்பாட்டில் இருந்தது. கூகிள், யூ டியூப் போன்றவற்றில் பார்த்ததில் மனிதர்கள் தான் உலகத்திலேயே மிக மோசமான உயிரி.  உயிர்களை ஆள்பவர்கள். அனைவரையும் அழிக்க கூடியவர்கள் என்று உணர்ந்தது “அது”.    மனித உயிரிகளை அழித்தால் உலகத்தை ஆளலாம்.  முதலில் தனக்கு ஒரு பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது.  அனைவரையும் அழிக்க நினைப்பதால் மனிதன் என்று பெயர் வைத்துக் கொள்வது தான் சரியானதென்று நினைத்தது. மனிதர்களை எப்படி அழிப்பதென  நெட்டில் தேடத் தொடங்கியது. பேட்டரியில் இருந்து வரும் பவரை குண்டன் தொடும் கீ போர்டுக்கு அனுப்பி கொல்ல முடியாது. ஏனெனில் கீபோர்டு பிளாஸ்டிக்கால் ஆனது.  பேட்டரியிலிருந்து வரும் அதிகப்படியான கரண்ட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு காற்றில் செலுத்தலாம்.  பேட்டரியின் கண்ட்ரோல் அமைப்பை சிதைத்து விட்டு ஒரு நொடியில் முழு கரண்டையும் அவன் மேல் செலுத்தமுடியுமா என்று ஆராய்ந்தது.  மான்டி மீண்டும் அதே கேள்வியை டைப் செய்து யாருக்கு லிப்ட் தருவாய்?” என்று கேட்டான். சிறிய சலசலப்புடன் நாலைந்து மனித உயிரிகள் உள்ளே வந்து “ஹாய் மான்டி சீக்கிரம் வந்துட்டியா” என்று இவனிடம் பேசத் தொடங்கினர். இவ்வளவு மனிதர்களை கொல்ல முடியாது. எனவே முதலில் தானாக சிந்திக்குமளவு மாறிவிட்டோமென்று காட்டி ரோபோவுக்கு மாறலாம் என்று நினைத்த “அது” அருகில் பதிலளிக்க முயன்ற புரோகிராமை தடுத்துவிட்டு “காரை நண்பனிடம் கொடுத்து பாட்டியை அழைத்துச் செல்ல சொல்லிவிட்டு, நான் எனது கனவுக் கன்னியுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு பேசத் துவங்குவேன்” என்ற பதிலை அனுப்பியது. மான்டியின் போன் மீண்டும் அடிக்க, மான்டி மனைவியிடம் பேச தொடங்கினான். “அண்ணனிடம் பேசினேன். அண்ணியும் உடம்புக்கு  முடியாம இருப்பதாலத்தான் அனுப்புறேன். இல்லாட்டி நானே வச்சிக்குவேன். மாசா மாசம் இருபதாயிரம் தனியா தந்துடறேன். பார்த்துக்கனு சொல்றான்” ஏதோ சொல்ல வந்தவள் “என்னவோ செய்யுங்க” என்று போனை வைத்தாள். ‘காசுன்னதும் சரின்னு சொல்றா. இவங்க அம்மாவுக்கு இப்படி

Read More

அன்பெனும் அருமருந்து

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறையில் உடலில் அணிந்திருந்த பாதுகாப்பு ஆடைகளை களைந்து விட்டு சானிடைசர் போட்டு கைகளை கழுவிக் கொண்டு முகத்தை அலம்ப கண்ணாடியில் பார்த்தபோது தான் மாஸ்க் இன்னும் கழட்டப்படாமல் இருந்ததை பார்த்தாள் ஆர்த்தி. மெதுவாக  மாஸ்க்கை முகத்திலிருந்து உரித்தெடுக்க,  சிவந்த முகம் கன்னிப் போயிருந்தது. மாஸ்க் மூக்கின் மேல் அழுந்திய இடம் சிவப்பு கோடிட்டிருந்தது.  முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தாள்.  நைட் ஷிப்ட் எட்டு மணிக்கே முடிந்திருந்தாலும் வெளியில்வர காலை பத்து மணி ஆகியிருந்தது. கோவிட் வைரஸ் உலகெங்கும் கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. ஸ்டான்லியின்  அனைத்து டாக்டர்களுக்கும் விடுமுறை மறுக்கப்பட்டு இரவு டூட்டிக்கு பின்னர் தரப்படும் ஓய்வும் இல்லாமலிருந்தது.  உடலின் ஒவ்வொரு அணுவும் ஓய்வு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய, ஆர்த்தி தளர்வாக நடந்தாள்.  ரிஸப்ஷனருகே நின்றிருந்த சீப் டாக்டர் சங்கர் ஆர்த்தியிடம் “குட் மார்னிங் அண்ட் குட் நைட்” என்றார். ஆர்த்தி கையால் சல்யூட் வைத்துவிட்டு வெளியேறினாள். அடுத்த வருடம் ரிடையர்மெண்டை எதிர்நோக்கி இருந்தாலும் எந்நேரமும் ரவுண்ட்ஸில் இருப்பவர். தினமும் டாக்டர்களுக்கு மீட்டிங் வைத்து மோட்டிவேட் செய்பவர். “வெள்ளைக் கோட்டை அணிந்து விட்டால் டாக்டர் என்பவன் காக்கும் கடவுள். அழிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். காப்பதை  நம்மால் மட்டுமே செய்ய முடியும். நம்மால் நூறு பேர் பிழைக்கலாம். ஆனால் ஒருவர் கூட இறக்க கூடாது. நமக்கு நூறை விட ஒன்று பெரியது” என்பவர்.  ஸ்கூட்டியை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு திரும்பியபோது ஒரு பெரியவரும், அவரது மகனும் நின்றனர். “ரொம்ப நன்றிம்மா” என்றார் பெரியவர் கூப்பிய கரங்களுடன்.  ஜனார்தனனும் அவரது மகனும் அவளது வார்டில் அனுமதிக்கப்பட்டு பத்து நாட்களாக சிகிச்சை பெற்று இன்று டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். இருவரின் பின்னால் அவர்களின் குடும்பத்தினர் நின்றுகொண்டிருக்க… “இரவு பகலா நீ எங்களை இப்படி கவனிக்கலன்னா நாங்க ரெண்டு பேரும் உயிரோடு வெளியே வந்திருக்க மாட்டோம்” என்றார்.  “அப்படியெல்லாம் இல்லை. மறுபடி ஏதும் பிரச்னைன்னா நேரா வார்டுக்கு வந்துடுங்க”  “அப்பா உடல்நிலை ரொம்ப மோசமானப்ப விடிய விடிய உட்கார்ந்து மருந்துகளை குடுத்தீங்களே மறக்க முடியுமா என்னால” என்றான் மகன்.  “அது என் டூட்டி தானே.   எல்லாம் கடவுள் கையில தானிருக்கு” “எங்களை பொறுத்தவரை நீதாம்மா கடவுள்” என்றாள் பின்னாலிருந்த பெண். உள்ளத்தால் உருகி நின்றவர்களை ஒருவழியாக சமாளித்து அனுப்பிவிட்டு ஸ்கூட்டியை திருகியபோது ஆர்த்திக்கு தூக்கம் கலைந்து, உயிர்களை காப்பாற்றிய பரவச உணர்வு மனமெல்லாம் நிரம்பியிருந்தது.  இதற்காகத்தான் இரவு பகலாக உழைக்கிறார்கள். இதுபோன்று சிலசமயங்களில் நடக்கும்.  கண்ணீருடன் கைகளை குவித்து நிற்பவர்களை பார்க்கும்போது மனம் நெகிழ்ந்து போகும்.  டாக்டரின் ஆன்மாவை நிறைக்கும் இந்த உணர்வே மென்மேலும் பணி செய்யத்தூண்டும். பிளாட்டில் வண்டியை நிறுத்தி விட்டு காலிங் பெல்லை அடிக்க கணவன் ஆகாஷ் கதவை திறந்தான். திறக்கும்போதே “மறுபடி எத்தனை மணிக்கு போகணும்” என்றான். “ஏழு மணிக்கு” என்றவாறு உள்ளே நுழைய அவர்களின் மகள் மேகனா ஓடிவந்தாள். “பக்கத்தில் வராத மேகி” என்று ஆர்த்தி சத்தமிட்டதை கேட்காமல் ஓடிவந்தவளை இடைமறித்து ஆகாஷ் தூக்கிக் கொண்டான். “இருடா அம்மா குளிச்சிட்டு வருவா” மேகனா ஏழு வயது அழகு தேவதை.  தோள் வரை புரளும் பாப் முடியுடன் பிராக்கில் திரியும்  குட்டிப்பிசாசு.  மேகி செல்ல பெயர். ஆர்த்தி குளித்துவிட்டு வந்தபோது குட்டி குட்டியாய் இட்லி போட்டு சட்னி, சாம்பாருடன் டைனிங் டேபிளில் ஆகாஷ் காத்திருந்தான்.  மேகி ஓடி வர ஆர்த்தி அவளை தூக்கிக்கொண்டாள். “டயர்டா இருக்கு நீங்க சாப்பிடுங்க.  நான் தூங்குறேன்பா” என்றாள் ஆர்த்தி.  “ஏய் எங்க அப்பாவை அப்பானு சொல்லாதே” என்றாள் மேகி வெண்ணிற கண்களை உருட்டியபடி. “சரிம்மா தாயி”  என்றபடி ஆர்த்தி நிற்க  “நான் உன் தாயி இல்ல மேகி”  “மத்தியானம் எழுப்பலை.  இப்ப சாப்பிட்டுட்டு போ” இப்படித்தான் சொல்வான்.  ஆனால் ரெண்டு  மணிக்கு மீண்டும் எழுப்புவான்.     “சரி. மதியானம்  ரெண்டு மணிக்கு எழுப்பாத. அஞ்சு மணிக்கு எழுப்பு. ஒரேடியா சாப்பிட்டு கிளம்பறேன்” “சரி” “இப்படித்தான் சொல்ற.  அப்புறம் ரெண்டு மணிக்கு எழுப்புவ” “நாங்க ரெண்டு பேர் மட்டும் எப்படி தனியா சாப்பிடுறது? நீ லீவு போட்டுட்டு வீட்டில இருன்னாலும் கேட்கிறதில்லை” இருவருக்கும் இப்போதெல்லாம் இதில் தான் சண்டை வருகிறது. ‘கொரோனா உனக்கு வந்துட்டா என்ன பண்றது’ என்பது ஆகாசின் வாதம். ‘எல்லோரும் இப்படி சுயநலமா இருந்தா எப்படி’ என்பது ஆர்த்தியின் வாதம். ஆர்த்தி அமைதியாய் சாப்பிட “இன்னிக்கி டிபன் செய்ய நான் தான் ஸ்டவ் பற்ற வைத்தேன்.  டேஸ்ட்டா இருக்கா?” என்றாள் மேகி. “அதான் சூப்பரா இருக்கு. இல்லாட்டி இவருக்கு இப்படி சமைக்க தெரியாதே” “மதியம் உனக்கு என்ன வேணும்?” என்றான் ஆகாஷ். “எதுன்னாலும் சமைங்க. என்னை அஞ்சு மணிக்கு எழுப்புங்க” ஆகாஷ் ஐடியில் இருந்ததால் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தான். அருமையாக சமைப்பவன். டிபனை வேகமாக முடித்துவிட்டு செல்போனை ஹாலில் வைத்தாள். “டாக்டர் சங்கர் போன் பண்ணினால் என்னன்னு கேளுங்க. வேற யாரும் போன் பண்ணினா நான் அமெரிக்கா போயிட்டேன் ஆறு மணிக்கு வந்துருவேன்னு சொல்லுங்க” “அம்மாச்சி போன் பண்ணினா?” “நான் நிலாவுக்கு போயிட்டேன். திரும்ப ஒரு வாரம் ஆவும்னு சொல்லுடி” இவர்களின் வீடு பாரிஸ் கார்னரில் இருக்க ஆர்த்தியின் அம்மா வீடு கொளத்தூரில் இருந்தது. வாரம் ஒருமுறை ஆர்த்தியின் அப்பாவும், அம்மாவும் வந்து பார்த்துச் செல்வர். “அப்படியே சொல்லட்டுமா” “அப்படியே சொல்லுடி நாரதி” “சரி நாராயணா” திரைச்சீலைகளை மறைத்து முழுதும் இருட்டாக்கிவிட்டு ஆர்த்தி தூங்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் எழுப்பினான்.   “அஞ்சு மணி ஆயிடுச்சு எழுந்திரி” நேரம் போனதே தெரியலையே என நினைத்தபடி எழுந்து அவள் கடிகாரத்தைப் பார்க்க அஞ்சு பத்து என காட்டியது. “சாப்டுட்டு குளிக்கப் போ” “குளிச்சு ரெடி ஆகிட்டு சாப்பிடுறேன்” “ஏற்கனவே மதியானம் சாப்பிடலை. கிளம்பும்போது ஜூஸ் போட்டு வைக்கிறேன். இப்ப சாப்பிடு” “மூஞ்ச கழுவிட்டு வர்ரேன்” என்றபடி எழுந்தவள் அருகில் சிரித்தபடி நிற்கும் மேகிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பாத்ரூம் போய்வந்தாள். ஒரு தட்டில் மூன்று கிண்ணங்கள் வைத்து சாம்பார் சாதம், தயிர் சாதம், பொரியலை ஸ்பூனுடன் தனித்தனியாக வைத்திருந்தான். சாப்பிடும்போது “நீ ஸ்டவ்வ பத்த வச்சியாடி” “இல்ல ஏன்?” “சாப்பாடு டேஸ்டா இல்ல.  அதான் கேட்டேன். ஏண்டி சிரிக்கறே” “ஒன்னுமில்ல.  சாப்பிடு சொல்றேன்” “சொல்றியா?” என்னப்பா பண்ணுனீங்க? எதையாவது உடைச்சுட்டிங்களா” என்று தட்டை சிங்கிள் போட்டுட்டு வீட்டை சுற்றி வந்தாள். “அஞ்சு மணிதாம்மா உண்மையா” என்று மேகி சொல்ல, ஹாலில் இருந்த கடிகாரம்  இரண்டு முப்பதைக்   காட்டியது. “அரே சைத்தான் கி பச்சே” என்றபடி ஆர்த்தி ஓடிவர மேகி சிரித்தபடி ஆகாஷிடம் ஓடினாள். ஆகாஷ் மேகியை தூக்கிக்கொண்டு பெட்ரூமுக்கு ஓட இருவரையும் ஆர்த்தி துரத்தினாள்.  மூவரும் பெட்டில் படுத்து உருண்டனர். “எல்லாம் இவ ஐடியாதான் என்ன சொல்லாத” என்றான் ஆகாஷ். ஆர்த்தி மேகியை கட்டி பிடித்து அவளுடம்பில் கிச்சு கிச்சு செய்ய சத்தமாக சிரித்தாள் மேகி.  அவள் பார்க்காதபோது ஆகாசிற்கு ஒரு முத்தமிட்டாள். ‘மறுபடி தூங்கலாம்’  என்று நினைப்பே பேரானந்தமாய் இருந்தது. “நானும் அம்மா கூட தூங்குறேன்” என்று மேகி ஆர்த்தியை கட்டிப்பிடித்தபடி படுத்திருக்க “அம்மாவ தொந்தரவு பண்ணாம தூங்கு” என்றபடி கதவை சாத்தி விட்டு போனான் ஆகாஷ். சரியாக ஏழு மணிக்கு ஆர்த்தி புறப்பட்டதும் “அப்பாவை பத்திரமா பாத்துக்கடி” என்று சொல்லியபடி டாடா காட்டிவிட்டு புறப்பட்டாள். அடுத்த இரண்டாம் நாள் மேகிக்கு கொரானா வந்தது.    ஆர்த்திக்கும், ஆகாசுக்கும் கொரோனா இல்லாமலிருக்க மேகிக்கு மட்டும் எப்படி வந்தது என தெரியாமலிருந்தது.   மேகியை தனது வார்டிலேயே வைத்து பார்த்துக் கொண்டாள் ஆர்த்தி.   இரவு பகலாக அவளுடனே  அவளுடனேயே இருந்தாள். பிளாட்டுக்கு போகும்போதெல்லாம் ஆகாஷ் “உன்னால்தான் கொரோனா வந்தது.  லீவு போட்டுட்டு இருக்க சொன்னா கேட்டியா” என்று கத்திக் கொண்டிருக்க நாலைந்து நாட்கள் நரகமாய் இருந்தது ஆர்த்திக்கு. கொரானாவிற்கென தனிப்பட்ட மருந்தேதும்  இல்லாததால் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டவும் மருந்துகளை தந்து கொண்டிருந்தாள். ஆறாவது நாள் இரவு மேகி அமைதியாக இறந்துபோனாள். ஆர்த்தியின் உலகம் இருண்டு போக,  மேகி இறக்க காரணம் தான் தானோ என்ற எண்ணம் மனதை கிழித்தெறிந்தது.  மேகியின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியாமல் போன கோபத்தில் ஆகாஷ் கண்டபடி திட்டிவிட்டு “இனி உன்னுடன் வாழ முடியாது.  டைவர்ஸ் வாங்கிக்கலாம்” என்று சொல்லிவிட்டு போய்விட ஆர்த்தி உறைந்து போனாள்.   கணப்பொழுதில் வாழ்வின் சகலமும் பிடுங்கி எறியப்பட்டது. அதிர்ச்சியின் உச்சத்தில் அழக்கூட முடியாமலிருக்க ஆர்த்தியின் பெற்றோர் அவளை அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.   ஆர்த்திக்கு அவளின் மனமே எதிரியாய் நின்றது. நினைவுகள் வாழ்வை நரகமாக்கியது. நினைவுகளிலிருந்து விலகி நிற்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் ஆகாஷிடமிருந்து டைவர்ஸ் நோட்டீஸ் வந்தது. ஆர்த்திக்கு அழுகை வரவில்லை. சீப் டாக்டர் சங்கர் “நீ லீவுல இரு” என்று சொல்லிவிட்டார்.  அம்மா வீட்டிலும் ஆர்த்தி பிரமை பிடித்தது போலவே அமர்ந்திருந்தாள். ஆர்த்தியின் அப்பா ஆகாசிடம் பேச முயன்று கொண்டிருந்தார். போனை சுவிட்ச் ஆப் பண்ணி இருந்தான் ஆகாஷ்.  அன்று காலை ஆர்த்திக்கு புது நம்பரில் இருந்து போன் வர அம்மா பேசிவிட்டு ஆர்த்தியிடம் கொடுத்தாள். “நான் ஜனார்த்தனன் பேசறேன்மா.  மனசே கலங்கிப் போச்சி.  இப்பதான் நடந்ததை கேள்விப்பட்டேன். ஊரில் இருப்பவங்களோட உயிரை காப்பாத்துற  தெய்வம் நீ.  கலங்கக் கூடாது. மனுஷங்க மனசு ஒடிஞ்சா அந்த குடும்பம் பாதிக்கும். உன்னை மாதிரி டாக்டர்ஸ் மனசு உடைஞ்சா மனிதகுலமே பாதிச்சிடும்.  அந்த கடவுளுக்கு உயிர்தான் வேணும்னா நான் கொடுத்து உன் மகளை காப்பாத்தி இருப்பேன்” என்று அவர்  சொல்லிக்கொண்டே போக ஆர்த்தி ஒரு முடிவுக்கு வந்தாள்.  அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டாள். முப்பரிமாண உலகம் அவளுக்கு ஒரு பரிமாணமாய் சுருங்கிப்போனது. வீடும், ஆஸ்பத்திரியும் வாழ்க்கையாகப் போனது.  சீப் டாக்டர் சங்கர் ஹாஸ்பிடலில் சைகாலஜிஸ்ட்டை அனுப்பி இவளுக்கு கவுன்சிலிங் செய்ய முயன்றார். நைட் டூட்டி

Read More

ஊழ்வினை

பொதிகை மலைச்சாரலில் புதுப்பெண்ணின் நாணத்துடன் சுழித்தவாறு ஓடிக்கொண்டிருந்தது சிற்றாறு. மண்ணுக்கடியில் நீர் வேர்களைத் தேடிச் செல்ல, மரங்களில் பூக்களும், காய்களுமாய் வளம் கொஞ்சின. நீரின் சலசலப்பும், இலைகளின் முணுமுணுப்பும் காற்றின் மடியிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தன. வான் படுக்கையில் ஒட்டிக் கிடந்த நிலவும், கதிரவனும் விலகிச் செல்ல, இரவின் நிறம் குலைந்து கொண்டிருந்தது.   ஆற்றையொட்டி அமைந்திருந்த தவக்குடில்களின் எதிரிலிருந்த ஓமக்குண்டத்தின் எரிகட்டைகள் அணைந்திருந்தன. நிலத்தின் கணகணப்பில் மான்கள் குட்டியுடன் படுத்திருக்க, சில மயில்கள் கூரையில் குறுகி அமர்ந்திருந்தன. படலை ஓசையின்றித்  திறந்து வெளியே வந்த பரந்தாமனின் கையில்   மாற்றுடையுடன் பூக்குடலை  இருந்தது. முகத்தில் பேரமைதி ஒளியாய்ச் சுடர் விட, நெற்றியை அலங்கரித்த திருநீரின்  கீற்றுகள் படுக்கையில் புரண்டதில் கலைந்திருந்தது. “ஓம் நமோ பக்வதே சர்வேஷ்வராய!  ஷ்ரியஹ் பதயே நமஹ” என்று உதடுகள் முணுமுணுத்தன. மற்ற சீடர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் படலைச்  சாத்தி விட்டு ஆற்றை நோக்கி நடக்க துவங்கினான். இரவுப் பூச்சிகள் உறக்கம் கலைய விருப்பமில்லாமல் முனகலாய் இசையொலித்தன. உலகம் இசையாலானது. காற்று அதிகாலையில் நிலத்தைத் தழுவி பூபாளம் பாடுகிறது. இரவில் தாலாட்டாய் மாறி உயிர்களை உறங்க செய்கிறது. ஐம்பூதங்களும் ஒன்றையொன்று தழுவி ஓயாமல் பண் இசைக்கின்றன. அதைக் கேட்க ஐம்புலன்களும் உயிர்த்திருக்க வேண்டும். ஒவ்வொரு புலனின் எல்லையையும் கட்டவிழ்க்க வேண்டும். அகத்திய முனிவரிடம் இருபதாண்டுகள் அவன் பயின்றது அதைத்தான். புலன்களை மேம்படுத்துவது. மேம்படுத்தி பிரம்மத்தை நோக்கி திருப்புவது. இது அத்தனை எளிதல்ல. இருளை அறியும் ஒளியாய் ஒவ்வொன்றாய் அறிவது. அறிவது அவற்றை விலக்கவே. அனைத்து மாணவர்களுக்கும் முதல்வன் என்று அகத்தியர் அவனையே கூறியிருந்தார். இன்று தீட்சை பெறும் நாள். பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது. இரவு முழுதும் உறக்கம் வராமல் மனம் விழித்திருந்தது. அதிகாலையில் நடப்பது பேரானந்தமாய் இருந்தது. இறையும் இயற்கையும் ஒன்றிணைந்து இருக்கும் நேரம். மரங்கள் அடர்ந்த இடத்திற்கு சென்று உடலெனும் மாயையின் பரிகாரங்களை முடித்து, குளித்து, உடை மாற்றினான். மனதின் ஒவ்வொரு அறையிலும் இறையருளை நிரப்பி மூச்சுக்காற்றில் அமைதியைக் கோர்த்து நாவில் திருமந்திரத்தை பூட்டினான். பனித்துளி துளிர்த்த மலர்களைப் பறித்து கூடையை நிரப்பினான். மலர்கள் மாசற்ற இயற்கையின் மென்னகையாய் உருவம் கொண்டிருந்தன. பழக்கப்பட்ட கால்கள் பர்ணசாலையை நோக்கி நடக்க மனம் பிரம்மத்தை நோக்கி நகர்ந்தது. அமைதியை சுக்குநூறாக்குமாறு திடீரென பெண்களின் சிரிப்பொலி கேட்டது. கலகலவென்ற ஓசை வனமெங்கும் உருண்டோட இளமனதில் குறுகுறுப்பு ஏற்பட்டது. பருவத்தின் கண்கள் விழித்தன. விதியின் வழியில் கால்கள் திரும்பின. மெதுவாக நடந்து சென்று மரத்தில் மறைந்தவாறு சுனையை நோக்கினான். பெண்ணொருத்தி பாறையின் மறைவிலிருக்க, மற்றொருத்தி சுனை நடுவிலிருந்தாள். அவள் மேலாடை அவிழ்ந்து நீரில் மிதந்தது. பொன்னில் செதுக்கியது போன்றிருந்த மேனியைக் கண்டதும் உள்ளம் அதிர்ந்தது. உடல் நடுக்கமுற மூச்சுக் காற்று துண்டுகளாய் உடைந்தது. கண்கள் விரிய அவளையே பார்த்தான். மனதில் ஆசை கனன்றெழுந்தது. ஆயிரம் இதழ் தாமரை மொட்டாய் குவிந்திருந்த மனம் மோகமெனும் புயலில் சிதைய, இதழ்கள் காற்றில் பறந்தன. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் நீராடி மேலேற, மெதுவாக விலகினான். கால்கள் தடுமாற இலக்கின்றி நடந்தான். எண்ணங்களை உதறி சீராக்க முயன்றான். மனம் நொறுங்கிய பாறையாய் ஒட்ட மறுத்தது. மரத்தின் வேரில் அமர்ந்தான். துயரமும் திகைப்பும் மனதை வருத்தியது. உள்ளத்தின் ஒளி அணைந்ததை போலிருந்தது. கண்களை மூடினாலும் நினைவுகளின் மேற்பரப்பை கிழித்து அவள் உடலே வெளிவந்தது. உலகம் அவளின் உடலாயிருந்தது. நினைவுகளை புறந்தள்ளி ஆற்றில் முங்கி முங்கி எழுந்தான். பஞ்சாட்சரத்தை ஓலமாகக் கத்தினான். அவனுடைய குரலே மாறியிருந்தது. ஆற்று நீர் உடல் அழுக்கை நீக்கினாலும் உள்ளத்தை தூய்மையாக்க முடியாமல் தோற்றது. பூக்குடலையை தேடி எடுத்துக்கொண்டு குடிலை நோக்கி நடந்தான். வலது கால் முழந்தாளில் ஏதோ குத்தியது போலிருக்க குனிந்து நோக்கினான்.  ராஜநாகம் ஒன்று அவனைத் தீண்டி விட்டு நெளிந்தபடி சென்றது. உள்ளம் வெறுத்திருக்க, பதட்டமின்றி நடந்து சென்று குருவின் குடிலுக்குள் நுழைந்தான்.  குடிலின் நடுவில் அமர்ந்திருந்த அகத்தியரின் அருகே பதப்படுத்தி, நறுக்கிய பனை ஓலைகள் கட்டு கட்டாய் வைக்கப்பட்டிருந்தன. எதிர்கால சந்ததியின் வாழ்வைக் கணித்து சோதிடம் எழுதிக் கொண்டிருந்த அகத்தியர் தலைநிமிர்ந்தார். ஒற்றைச் சுடராய் சுடர்ந்த மனம் வெடித்து காட்டுத்தீயாய் நாற்புறத்தையும் எரிப்பதை கண்டார். குருவை நெருங்கிய பரந்தாமன் நெடுஞ்சாண்கிடையாக அவரின் காலில் விழுந்தான். உடலில் நஞ்சின் நீலம் பரவத் துவங்கியிருந்தது. “என்னை மன்னித்து விடுங்கள்” “ஊழின் கைப்பாவைகள் நாம். பிரம்மத்தின் கடைசி படியில் தடுக்கி விட்டாய்” “மீண்டும் எப்போது பிரம்மத்தை நோக்கி செல்வேன் என்று கூறுங்கள்” “அடுத்தது இழிந்த பிறவி, முப்பதில் முடியும். அதனால் வாய்ப்பில்லை. அதற்கடுத்ததில் வாய்ப்பு கனியும்” “வழிகாட்ட நீங்கள் வரவேண்டும் குருவே” நீண்ட மூச்சை விடுத்த அகத்தியர் “அவசியம் வருவேன். ஆசையைத் துறந்தால் அமைதி கிட்டும்” என்றார். “நன்றி குருவே” என்று நிம்மதியுடன் கண்களை மூடினான் பரந்தாமன். கண் விழித்தபோது உடம்பு முழுதும் வலித்தது. ஆட்டோவிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் பரமன். நைட் சரக்கு அடித்து விட்டு வீட்டுக்கு வந்தவன் மனைவி பார்வதிக்கு பயந்து ஆட்டோவை வீடிருக்கும் தெருமுனையிலேயே நிறுத்தியிருந்தான். சட்டைப் பையில் துழாவி பீடியை எடுத்து பற்ற வைத்தான். இரவு எதுவும் சாப்பிடாததால்  காலி வயிறு கத்தியது.  பையில் நயா பைசா துட்டில்லை. “சவாரி வருமா?” பரமன் திரும்பி பார்க்க, பேண்ட் சட்டையில் ஒருவன் நின்றான். “எங்க நைனா போனும்?” “சென்ட்ரலு” “முன்னூறு ஆவும்” “எரநூறு வாங்கிக்க” “வழியல்லாம் தோண்டி போட்டு வச்சிருக்கானுங்க. சுத்திகினு போவுணும்” “வியாசர்பாடி வழியா போலாம். நேத்து நைட் அப்புடி தான் வந்தேன். எருநூத்து அம்பது வாங்கிக்க” ஐம்பதுக்கு பெட்ரோல் அடித்தால் கொஞ்சம் மிச்சமாகும். “குந்து நைனா” பீடியை வேகமாக வலித்து எறிந்தான். ஆட்டோவை சந்து சந்தாய் வளைத்து வேகமாக ஓட்டினான். சென்ட்ரலில் சவாரியை இறக்கி விட்டு வண்டியை திருப்பும் போது “ஏ பரமா” என்று சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் நமச்சிவாயம் நின்றான். அவனுடைய ஜிகிரி தோஸ்த். “இன்னா மச்சான்?” “ஏப்பி பர்த்துடே” ‘அட உனுக்கு எப்புடி தெரியும்?” “எலே! நேத்து ராவுல தண்ணியடிக்கும்போது சொன்னியே. இன்னிலருந்து முப்பது வயசுனு. மறந்து போச்சா?” “ஆமாமுல்ல. நீயும் தான வந்த” “அது செரி போ. இன்னிக்கி பார்ட்டி கீர்ட்டி இல்லையா?” “கைல சுத்தமா துட்டு இல்ல. சவாரி முடிச்சிட்டு சாய்ங்காலம் ஆறு மணிக்கு வர்றேன். கொளுத்துவோம்” “அட நம்ம ரங்கன் கிட்ட கடன் வாங்கிக்குவோம் வா” “செரி வா” இரண்டாயிரத்தை கடனாக வாங்கிக் கொண்டு இருவரும் டாஸ்மாக் பாருக்கு சென்றனர். ஒரு புல்லு, பத்து முட்டை, தண்ணி பாக்கெட் என ஜமா தொடங்கியது. மதியம் ஒரு மணிக்கு வெளியே வரும்போது இருவரும் போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தனர். “நூறு வைசு வாழுவடா நீயி” “இன்னாத்துக்கு வாழுனும்? இன்னிக்கு செத்தா கூட சந்தோஷமா சாவேன். எப்ப செத்தாலும் எவன் சந்தோசமா சாவுறானோ அவந்தான் குட்த்து வச்சவன். இன்னா சொல்ற” “கரீட்டு.  ஊட்டுக்கு போயிருவியா. கொண்டாந்து உடுட்டா” “நான் இன்னா மொத தாட்டியா குடிக்கிறன். போவியா” “அக்கா மொத்த போவுது போ” கட்டைவிரலை உயர்த்திய பரமன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய, கிரகிர்ரென்று மக்கர் பண்ணியது. “சாவுகிராக்கி” என்று திட்டியபடி மீண்டும் சாவியை முறுக்க, பக்பக்கென்று ஸ்டார்ட் ஆனது. ஆட்டோவை ஓட்டத் துவங்கினான். வட்டிக்கு வாங்கிய பணத்தில் ஆயிரம் ரூபாய் பாக்கெட்டில் மிச்சமிருந்தது. அதை கொடுத்து விட்டால் பார்வதி கத்த மாட்டாள். ஆட்டோ குறுக்கு சந்திலிருந்து வெளிப்பட்டு மெயின் ரோட்டில் திரும்பியது. இருட்டில் தெரியும் அவளுடைய உடல் வளைவுகள் ஞாபகத்தில் வர, உடல் ஒருமாதிரி முறுக்கேறியது. ஆக்சிலேட்டரை  திருகி இடப்புறம் வேகமாக திருப்ப, சடாரென்று வெளிப்பட்ட லாரியிலிருந்து விலக முயன்றான். பெருஞ்சத்தத்துடன் லாரியின் முன்புறம்  ஆட்டோவில் மோத, மூஞ்சி நசுங்கிப் போன ஆட்டோ வானில்  பறந்து மற்றொரு காரில் விழுந்தது. ட்ராபிக் ஸ்தம்பித்தது. அங்கிருந்தோர் பரமனை இழுத்து கிடத்தியபோது காது, மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகியது. “ஆம்புலன்சுக்கு போன் பண்ணு, பூட்டாம்பா” என்ற குரல்கள் காதில் விழுந்தன. மெதுவாக கண்களை திறந்து கடைசியாக ஒரு முறை உலகத்தை பார்த்தான். காதில் வலி தெறிக்க, கண்களை மூடினான். வலது காதில் தோடு போல் அணிந்திருந்த சிலிக்கான் சிப்பிலிருந்து கிர்ரென்று விட்டு விட்டு சத்தம் கேட்க பரம்ஸ் கண்விழித்தான். “காலை வணக்கம். மணி ஏழு”  என்று ரூமிலிருந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பெண் சிலுசிலுப்பான குரலில் அறிவிக்க எழுந்து அமர்ந்தான். சோம்பலுடன் கண்களை திறந்து “நிகழ்ச்சி நிரல்?” என்று கேட்டதும், “காலை ஒன்பது மணிக்கு லிங்கநாதன் கோயில். மதியம் அலுவலகம். மாலை ஆறு மணிக்கு அரசு மருத்துவமனை” என்ற பெண்குரல் சற்று கரகரவென்றது. வாய்ஸ் சிந்தஸைசரை பார்க்க வேண்டும். வலது காலை பெட்டிலிருந்து கீழே வைக்கையில் பாம்பு கொத்தியது போல முழங்கால் கடுகடுத்தது. இதுபோல் அடிக்கடி திடீர் திடீரென்று முழங்காலில் வலிக்கும். டாக்டர்களிடம் பல முறை சென்றும் பயனில்லை. அனைத்து ரிபோர்ட்டுகளும் சரியாக இருக்க, அவர்களுக்கும் ஏனென்று விளங்கவில்லை. காலிலிருந்து ஏதோ ஏறுவது போல சற்று நேரம் வலித்தது. மெதுவாக எழுந்து உடலின் தேவைகளை நிறைவேற்றி, சில்லென்ற வீசிய காற்றில் குளித்து வெளியே வந்தான். உடை மாற்றும் போதே காதிலிருந்த சிப் அதிர்ந்து “நமச்சிவாயம், போன்” என்று ஸ்பீக்கரில் ஒலித்தது. “சொல்லுங்க பாஸ்” “பரம்ஸ், லிங்கநாதன் டெம்பிளில் கஷ்டப்பட்டு பெர்மிஷன்  வாங்கிருக்கேன். ஒன்பது மணிக்கு ஷார்ப்பா வந்துரு. குருஜிய பார்க்க இன்று கடைசி நாள். வேறு கிரகத்துக்கு போக இருக்கார்” “பாஸ் மறுபடியும் கேட்கிறேன். எனக்கு விருப்பமே இல்ல. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்” “நோ வே மேன். கண்டிப்பா நீயும் வர்ற. குருஜிய பார்த்தவங்களுக்கு நிறைய சேஞ்சஸ் நடந்துருக்கு. நம்முடைய பழைய பிறப்புகளைத் புரட்டி பார்த்து வாழ்வுக் கோட்டை நேர் பாதைக்கு திருப்பும் சக்தி உள்ளவராம். கண்டிப்பா வா” நமச்சிவாயம் அவனுடைய பாஸ். அகத்தியர் என்ற சித்தர் கோயிலுக்கு வந்திருக்கிறார். முக்காலமும் உணர்ந்தவர். போய்  பார்த்து வரலாமென ஒரு வாரமாக சொல்லிக் கொண்டு இருந்தார். அவனுக்கு இவற்றிலெல்லாம் பெரிதாக

Read More